Monday, March 13, 2017

வெண்பாக்கள் பத்து ...!!!

உயிரே உனையே உறவாய் நினைத்தேன்
குயிலாக  நித்தமும் கூவி! - மயிலாய்
எனையாட வைத்த எழிலோ வியமே!

உனையே நினைக்கும் உளம்.


நிழலாக நீயிருக்க நெஞ்சி லினிக்கும்
குழலிசை யாய்நான் குளிர்வேன்!- அழகே !
அழைத்தால் வருவேன்  அருமையாய்ப் பாடி
மழைபோல் பொழிவாய் மகிழ்ந்து.


மகிழும் மனத்தில் வளர்பிறை நீயே!
அகிலாய் மணக்கும் அணங்கே! - சகியே!
பரிவொடு பார்த்திடும் பாச மலரே !
சிரிப்பாய் இதயம் திறந்து .


ஆரமுதே! தேன்மழையே! ஆனந்தப் பூங்காற்றே!
பூரண வான்நிலவே! பூரித்தேன் - ஆரணங்கே!
பாரா முகமேனோ பைங்கிளியே! என்னாசைத்
தீராதே பக்கம்வா சேர்ந்து.


அன்பில் கரைந்தாயோ ஆருயிரே! அன்னமே!
என்னுள் இனிக்கின்றாய் எப்போதும்!- மின்னிடும்
பொன்னொளியே! புத்தம் புதுமலரின் வாசமே!
சொன்னது நீதானோ சொல்.


நினைவால் சிலைவைத்து நெஞ்சம் குளிர்வேன்
உனையே மதிப்பேன் உயிராய்!- வனைவேன்
கவிதை அழகுடன் காதலில் வீழ்ந்து
தெவிட்டாத் தமிழில் திளைத்து .


ஆவாரம் பூமேனி ஆளை மயக்குதே 
பாவாடை தாவணியில் பார்த்தவுடன்! -  தூவானம் 
தூவுகையில் உள்ளமெலாம் துள்ளிக் குதித்திடும்  
தாவும் மனத்தில் தவிப்பு.

தேடி மதுசேர்க்கும் தேனியாய்ச் சுற்றினேன் 
ஓடி ஒளிந்தால் உளம்சோர்வேன் - பாடிப் 
பரவச மாயுனைப் பார்த்திட வேண்டும் 
வரந்தரு வாயா மலர்ந்து .

குவளை விழிகள் குளிர்ந்தது மேனோ 
சிவந்த இதழ்களில் தேனோ?- உவகை 
பெருகிட காதலாய்ப் பேசிக் களிக்க 
வருவாய்நீ யேயென் வரம்.

வண்ணக் கனவில் வடிவினைக் கண்டதும்
எண்ணம் முழுதும் இனித்ததே! - பெண்ணுன்  
இதயக் கதவும் எனக்காய்த்  திறந்தால் 
மிதப்பேன் சிறகு விரித்து .

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment