Wednesday, October 25, 2017

தென்றலே ....!!!



தென்றலே மெல்ல நீதொடும் தருணம்
செவ்விதழ் மலர்ந்திடச் செய்தாய் !
அன்றலர் பூவின் நறுமணம் வாங்கி 
அம்பொழில் முழுவதும் நிறைத்தாய் !
இன்பமாய்ப் பாடும் கருங்குயில் குரலின்
இனிமையும் தாங்கிநீ தவழ்ந்தாய் !
பொன்னிற வண்டு சிறகினை விரித்துப்
புன்னகை புரிந்திட அசைந்தாய் !
நதிக்கரை யோரம் நாணலைத் தழுவி
நளினமா யாடிட வைத்தாய் !
கதிரெழும் நேரம் கடலலை யுடனே
கைகளும் கோர்த்துநீ அலைந்தாய் !
குதித்திடு மருவி நீரினில் கலந்து
குளித்திட ஆசையும் கொண்டாய் !
கொதித்திடும் பகலில் மரநிழல் தேடி
குளிர்ந்திட மறந்துநீ ஒளிந்தாய் !
பலகணி திறந்தே என்னவள் எட்டிப்
பார்த்திடும் பொழுதினில் அணைப்பாய் !
கலகல வென்றே சிரித்திடு மவளின்
கண்களில் காதலை விதைப்பாய் !
புலவனென் இதயம் புரிந்திட வைத்துப்
புனைந்தவென் கவிதையைப் பகர்வாய் !
நலமுற வாழ வாழ்த்தினைச் சொல்லி
நகன்றிடு அவ்விடம் விட்டே !!

No comments:

Post a Comment