Wednesday, October 11, 2017

பாவலர் பழனிகுமார் அவர்களுக்கு அறுபதாம் பிறந்தநாள் வாழ்த்து ....!!!

அறுபதைத் தொட்ட தமிழ்க்கவி நின்னை 
     அன்புடன் வாழ்த்திட வந்தேன் !
குறுநகை யோடு கொள்கையிற் சிறந்து 
     குவலயம் போற்றிட வாழி !
இறுக்கிடும் நோயும் இனியுனைக் கண்டால் 
     இடறியே ஓடிட வேண்டும் !
நறுமணப் பூவின் தூய்மையைப் போலே 
      நலமுடன் நண்பனே வாழி !

சிறுமைகள் கண்டால் பொங்கியே எழுந்து 
     திருத்திடப் பாச்சரம் தொடுப்பாய் !
பொறுப்புடன் எழுத்தால் கொடுமைகள் தீர 
     புரிந்திட வைக்கவே முயல்வாய் !
பெறுமதி யோடே அறிவுரை சொல்லி 
    பெருமைகள் சேர்த்திட நினைப்பாய் !
நொறுங்கிடா வண்ணம் உள்ளமும் பூக்க 
     நூறினைத் தாண்டியும் வாழி !

அறவழி நின்று பண்புடன் வாழும் 
     அருந்தமிழ்ச் சோதரன் நீயே !
உறவுகள் மதிக்க மனிதமும் பேணும் 
     உயர்குணம் கொண்டவன் நீயே !
விறலுனைத் தொடர சாதனை புரிய 
     விருப்பொடு கவிவடிப் பாயே !
சிறப்புடன் வாழ உளநிறை வோடு 
     சியாமளா வாழ்த்திடு வேனே !!!

No comments:

Post a Comment