சீரிழப்பார் சிறப்பிழப்பார்
செயல்மறந்து வெறித்திருப்பார் !
பேரிழப்பார் புகழிழப்பார்
பெருமதிப்பைத் தானிழப்பார் !
வீரியமாய்ப் பேசிடுவார்
வெறுப்புறவே செய்திடுவார்!
காரியத்தைக் கோட்டைவிட்டுக்
கவலையின்றி மிதப்பாரே !!
நாக்குழற உளறிடுவார்
நடைதளரச் சோர்ந்திடுவார் !
வாக்குவாதம் வந்துவிட்டால்
வார்த்தகளால் குதறிடுவார் !
தூக்கத்தில் பிதற்றிடுவார்
சுற்றத்தை மறந்திடுவார் !
சாக்கடையில் கிடந்தாலும்
சார்ந்தோரும் மதியாரே !!
தள்ளாடித் தள்ளாடித்
தடுமாறி விழப்போவார் !
கள்ளனைப்போல் பதுங்கித்தான்
கதவோரம் நின்றிருப்பார் !
பிள்ளையுடன் தன்மனையாள்
பிரியத்தைத் துறந்திருப்பார் !
வெள்ளைமனம் கொண்டிடினும்
வேதனைதான் அவர்நிலையே !!
சூழ்நிலையே புரியாமல்
சுயபுத்தி இழக்கவைக்கும் !
கீழ்த்தரமாய் மாற்றிவிடும்
கேடுகெட்டப் பழக்கமிது !
பாழ்குடியை விட்டுவிட்டால்
பண்புடனே சிறப்புறலாம்
வாழ்வதுவோ சிலகாலம்
வளத்துடனே வாழ்வீரே !!!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment