Friday, October 6, 2017

மதுவுக்கு அடிமையானால் ....!!!


சீரிழப்பார் சிறப்பிழப்பார் 
      செயல்மறந்து வெறித்திருப்பார் !
பேரிழப்பார் புகழிழப்பார் 
      பெருமதிப்பைத் தானிழப்பார் !
வீரியமாய்ப் பேசிடுவார் 
      வெறுப்புறவே செய்திடுவார்!
காரியத்தைக் கோட்டைவிட்டுக் 
      கவலையின்றி மிதப்பாரே  !!

நாக்குழற உளறிடுவார்
     நடைதளரச் சோர்ந்திடுவார் !
வாக்குவாதம் வந்துவிட்டால் 
     வார்த்தகளால் குதறிடுவார் !
தூக்கத்தில் பிதற்றிடுவார் 
       சுற்றத்தை மறந்திடுவார் !
சாக்கடையில் கிடந்தாலும் 
      சார்ந்தோரும் மதியாரே  !!

தள்ளாடித் தள்ளாடித் 
     தடுமாறி விழப்போவார் !
கள்ளனைப்போல் பதுங்கித்தான் 
     கதவோரம் நின்றிருப்பார் !
பிள்ளையுடன் தன்மனையாள் 
      பிரியத்தைத் துறந்திருப்பார் !
வெள்ளைமனம் கொண்டிடினும் 
      வேதனைதான் அவர்நிலையே !!

சூழ்நிலையே புரியாமல் 
      சுயபுத்தி இழக்கவைக்கும் !
கீழ்த்தரமாய் மாற்றிவிடும் 
       கேடுகெட்டப் பழக்கமிது !
பாழ்குடியை விட்டுவிட்டால் 
     பண்புடனே சிறப்புறலாம் 
வாழ்வதுவோ சிலகாலம் 
     வளத்துடனே வாழ்வீரே !!!

சியாமளா ராஜசேகர் 
  


No comments:

Post a Comment