Wednesday, October 25, 2017

காவியாய் விரிந்த வானில் ...!!!


காவியாய் விரிந்த வானில் 
***கதிரவன் உதிக்கும் கோலம் 
ஓவியம் தீட்டி னாற்போல் 
***ஊர்ந்திடும் மேகக் கூட்டம் 
தூவிடும் ஒளியும் பட்டுச் 
***சுந்தர புவனம் பூக்கும் !
வாவியில் மலர்க ளாடும்
***வனப்பிலே உள்ளந் துள்ளும்  !

கூம்பிய இதழ்கள் மெல்ல 
***கோலமாய் விரிந்த தாலே 
காம்புடன் நிற்கும் பூவும் 
***களிநடம் புரியும் நீரில் !
பூம்புனல் பார்க்கும் வேளை
***பொங்கிடும் இதயம் தன்னால் !
சோம்பலும் மறைந்தே போகும் 
***சூரிய உதயத் தாலே !!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment