Tuesday, October 10, 2017

பொன். பசுபதி ஐயா அவர்களுக்கு முத்துவிழா வாழ்த்து ...!!!



புதுவையிற் பூத்த பொன்பசு பதியார் 
      புகழ்மணம் வீசிடக் கண்டேன் !
மதுரமாய் மரபில் கவிதைக ளியற்றி
      மாட்சிமை பெற்றிடக் கண்டேன் !
முதுமையை வரமாய் ஏற்றிருப் போரின் 
       முகத்தினில் கனிவினைக் கண்டேன் !
விதுலனாய்ப் புவியில் விளங்கிடு மவர்தம் 
      வெற்றியின் மகத்துவம் கண்டேன் !

சுந்தரத் தம்மை துணையுடன் நாளும் 
        சுகமுடன் பணிகளை முடித்துக்
கந்தனி னருளும் கைவரப் பெற்றுக்
      காசினி வியந்திட வாழி ! 
அந்தமிழ்ப் பேணும் சோலையில் மூத்த 
      ஐயநின் ஆசிகள் வேண்டி 
வந்தனை செய்தேன் அன்புட னேற்று
       மகிழ்வுடன் வாழ்த்திடு வீரே !

எண்பதை எட்டும் நாளினி லும்மை 
      எண்டிசை வாழ்த்திட முந்தும் !
பண்பினிற் சிறந்த பாவல ரெனவே 
     பைந்தமிழ் தேன்மழை சிந்தும் !
கண்ணிய மான காவல ராகக் 
       கவியுமைப் பெற்றதெம் பேறு !
வண்டமி ழாலே வையகம் போற்ற 
     வாழிய ஆண்டுகள் நூறு !

சியாமளா ராஜசேகர் 


No comments:

Post a Comment