Saturday, October 14, 2017

இளங்காலை ஆட்சி ...!!!



கடல்குளித்த கதிரெழுந்து 
கனிவுடனே விழிதிறக்க 
கவினுறவே சிவந்திருக்கும் 
     கோலம் - அந்த 
சுடரொளியில் இருள்விலக
சுகமான பரவசத்தில் 
துயிலவிழ்ந்து மணந்திருக்கும்
        ஞாலம் .... !! 

விடைகொடுத்து மதியனுப்பி 
விட்டுவந்த கதிரவனின்
மெல்ல எழும் எழில்கொஞ்சும் 
     தோற்றம் -  அதன் 
சடைவிரிய கீழ்வானில் 
சாந்தமுகம் காண்பதற்கு 
தவழ்ந்துவரும் முகிலலையின் 
      கூட்டம் .... !!

பொற்கிரண ஒளி உமிழ 
பொங்கியெழும் வெள்ளலைகள்
புத்துணர்வில் மெல்லிசையை  
    மீட்டும் - அந்த 
சொற்களில்லா இன்னிசையும் 
சொக்கவைக்கும் இதயத்தைச்
சோர்வகற்றிச் சுகந்தன்னைக்
       கூட்டும் .... !!

கரைதொட்டுக் கதைபேசிக் 
கணநேரம் உறவாடிக் 
காதலுடன் மீண்டுமுள்ளே 
     திரும்பும்  - அந்த 
நுரைபூக்கள் வாழ்வுசில 
நொடியேதான் என்றாலும் 
நுவளாமல் பயணத்தை 
      விரும்பும் !

தென்றலுடன் மிதந்துவரும் 
செம்மலரின் மணமீர்க்க 
செவ்வண்டு மதுவருந்தத்
      துடிக்கும் ! -  அந்த 
இன்பத்தில் தனை மறந்தே 
இசைபாடிப் பறந்துவந்து  
இதழ்முத்த மிட்டுத்தேன்
     குடிக்கும்     !!

பச்சைவயல் வெளிதன்னில் 
படர்ந்திருக்கும் புகைபோலே 
பனிமூட்டம் கண்மறைக்கும் 
    காட்சி - அது 
மிச்சமின்றி மெதுமெதுவாய் 
விட்டகலும் காரணமே 
வெய்யோனின் இளங்காலை 
     ஆட்சி .... !!

புல்லாக்கு போட்டதுபோல் 
புல்நுனியில் பனித்துளிகள் 
பூத்துநிற்கும் அசையாமல் 
    பாரீர் ! - அதை 
வில்லம்பு ஏதுமின்றி 
வெண்கதிரோன் பார்வையினால் 
விரட்டிவிடும் சாகசத்தைக் 
      காணீர் ....!!

புன்னகையைப் பரிசளிக்கும் 
புலர்காலைப் பொழுதினிலே 
பூபாளம் செவியோரம் 
        ஒலிக்கும் - இது 
அன்றாடம் நடந்தாலும் 
அன்றதுதான் நிகழ்வதுபோல் 
ஐம்புலனும் புத்துணர்வில் 
       களிக்கும் !

அம்மம்மா அழகதிலே 
அகமுழுதும் லயித்திருக்கும் 
அதனூடே உன் நினைவும் 
     மோதும்  ! - உன் 
தும்பைப்பூ சிரிப்பினிலே 
துள்ளிவரும்  பேச்சினிலே 
தொலைந்துவிட்ட என் மனத்தைத்  
       தேடும் .... !!

மாஞ்சோலைக் கிளிகொஞ்ச 
மையலிலே உடல்துவள
மௌனத்தில் மனம்கரையும் 
     காலை  - மிக 
வாஞ்சையுடன் கனவினிலே 
வஞ்சமின்றி  வளையவந்து 
வார்த்துவிட்டாய் என்நெஞ்சில் 
      பாலை .... !!

சியாமளா ராஜசேகர் 


        


No comments:

Post a Comment