Sunday, October 15, 2017

ஆதிசிவன் தந்த ஆடற்கலை ...!!




ஆடிய பாதன் அளித்தநற் கலையாம் 
***அற்புத நாட்டியக் கலையே !
சூடிய புலித்தோ லாடையு மிடையில் 
***சுற்றிய அரவமும் கொண்டு 
மூடிய கையில் டமருகம் அடித்து 
***முயலகன் காலினில் மிதித்தே 
ஆடினார் உடுக்கை மான்மழு வுடனே 
***அக்கினி ஏந்திய சிவனே !

பதஞ்சலி வியாக்ர பாதரின் தவத்தால்  
***பரமனின் தாண்டவம் காண  
சிதம்பரந் தலத்தில் அம்பலந் தன்னில் 
***திருநடம் புரிந்தனன் அன்றே !
பதமிடந் தூக்கி யாடிடும் கோலம் 
***பார்த்திட அள்ளிடும் உள்ளம் !
விதவித மாக நாட்டியம் புரியும் 
***விமலனின் திருவுரு அழகே !

தாண்டவ மாடு மீசனே முதலாய்த் 
***தந்ததிவ் வருங்கலை தானே !
காண்பதற் கெழிலாய் மங்கைய ராட 
***கலைநயங் கொஞ்சிடும் திண்ணம் !
ஆண்டிடுந் தேவன் அருளிய கலையை 
***ஆண்களு மாடுவ துண்டே !
ஈண்டிதற் கில்லை ஈடென வுணர்ந்தே 
***இக்கலை வளர்த்திடு வோமே !

( எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment