Tuesday, February 17, 2015

ஏக்கம்



மூன்றுமுடிச்சு கழுத்தில்போட்டு 
மூவைந்து வருடமாச்சு 
முத்தென்னுள் முகிழ்க்கவில்லை 
மூடர்வார்த்தை தைத்திடுதே ! 

மூடுபனி என்வாழ்வை 
மூடிவைத்த மாயமென்ன 
மூப்புவந்து சேருமுன்னே 
மூரலென்னுள் மலராதோ ? 

வளைஅடுக்க வழியில்லை 
வளைகாப்பு நடக்கவில்லை 
பூச்சூடிப் பார்க்கவில்லை 
பூயென்னுள் பூக்கவில்லை ! 

பனிக்குடம் உடைந்ததில்லை 
பால்வடிந்து மணந்ததில்லை 
பழிசுமந்து கிடந்திடவே 
பாவமென்ன செய்தேனோ ? 

சொத்துசுகம் இருந்தென்ன 
சொர்க்கமே பிள்ளையன்றோ 
தாய்மைவரம் வேண்டுகின்றேன் 
தாயாகத் தவிக்கின்றேன் ! 

மார்பணைத்துப் பால்புகட்ட 
மங்கைமனம் துடிக்கிறதே 
மறலிவந்து கூப்பிடுமுன் 
மழலைமடி நிரப்பாதோ ? 

மலடியென்ற பட்டத்துடன் 
மயானம்போக மனமில்லை 
மாதம்பத்து நான்சுமக்க 
மடிப்பிச்சை கேட்கின்றேன் !!

1 comment:

  1. திருக்கரு காவூர்த் தாயே!

    தருப்பையை ஏந்தும் முனியின்
    தகித்திடும் சாபம் வந்து
    கருப்பையைத் தாக்கும் நேரம்
    கதறிய வேதிகைக்குக்
    கருவினைக் காத்துத் தந்த
    கருணையே! முல்லைப் பூக்கள்
    அரும்பிடும் கருகா வூரின்
    அன்னையே, அழகே, போற்றி!

    இல்லறம் பேணிக் காத்தும்
    இன்னமும் மழலைச் செல்வம்
    இல்லைஎன் றேங்குவோர்தம்
    இதயதா பத்தைப் போக்கி
    நல்லதோர் பிள்ளைச் செலவம்
    நல்கிடும் தாயே! வாச
    முல்லைசூழ் கருகா வூரின்
    முழுமுதற்பொருளே, போற்றி!

    தாயவள் கருவில் ஜீவன்
    தரிக்கின்ற நேரம் தொட்டு
    சேயினைக் கர்ப்பத் திற்குள்
    செவ்வனே புரந்தச் சேய்க்கும்
    வாயுவும், உணவும் தந்து
    வாழவைப் பாயே, தாயே!
    வாயவிழ் முல்லைக் காட்டின்
    வண்ணமே, பாதம் போற்றி!

    சந்ததம் உந்தன் பாதம்
    சரணமென் றடைவோர் வாழ்வில்
    சந்ததி தழைக்கச் செய்வாய்!
    சத்கதி அமையச் செய்வாய்!
    சந்தனத் தென்றல் சூழும்
    சந்தமே! தாய்மைப் பேறே!
    வந்தனை செய்தோம் முல்லை
    வனத்துறை வாழ்வே, போற்றி!

    விரிதரும் வானம், ஆங்கே
    விளங்கிடும் கோள்கள், மீன்கள்
    எரிதழல் என்னச் சுற்றும்
    எண்ணரும் தீக்கோளங்கள்
    திரிதரும் அண்டம் யாவும்
    தேவியுன் கருவே அன்றோ?
    திரிபுர சுந்தரீ! என்'
    திருக்கரு காவூர்த் தாயே!


    சு.ரவி

    ReplyDelete