Tuesday, February 17, 2015

சம்மதிப்பாயா அம்மா ....???





மனதிற்குப் பிடித்தவரை 
மணாளனாய் வரிந்திட்டேன் 
மனதார சம்மதித்து 
மகளென்னை வாழ்த்திடுவாய் ! 

இருமனமும் கலந்தபின்னே 
இணைத்துவைத்தல் முறைதானே ! 
இடையூறாய் நீயிருந்தால் 
இதயம்நூறாய் வெடித்திடுமே ! 

தாயேயுன் சம்மதத்தை 
தயவுடனே வேண்டுகின்றேன் 
தயங்குவதேன் கலங்குவதேன் 
தடுப்பதெது சொல்லம்மா ! 

களங்கமில்லா காதல்தான் 
கட்டுப்பாடு மீறலையே 
கடலளவு கண்ணீர்விட்டும் 
கல்மனமும் கரையலையே ! 

சாதிவெறி கொண்டவுள்ளம் 
சம்மதிக்க மறுக்கிறதோ ? 
சாகும்வரை போராடுவேன் - நீ 
சரிசொல்லாமல் மணமுடியேன் ! 

சாதிக்குள்ளே மணம்செய்தால் 
சாகாவரம் கிடைத்திடுமோ ? 
சந்தோசம் நிலைத்திடுமோ ? 
சால்பெனக்குத் தந்திடுமோ ? 

தரையிலிட்ட மீன்போலே 
தவிக்கின்றேன் துடிக்கின்றேன் 
தாலிஎந்தன் கழுத்திலேற 
தாயேநீ அருள்புரிவாய் ! 

என்காதல் ஏற்றுக்கொள்ள 
எள்ளளவும் மனமிலையோ ? 
கன்னியாய் நாள்கழிப்பேன் 
கள்ளத்தனம் நான்செய்யேன் ! 

கடவுளெனக்கு நீயம்மா 
காதலுனக்குப் பிறகம்மா 
கனியுமென்ற நம்பிக்கையில் 
காத்திருப்பேன் என்அம்மா ....!!!

No comments:

Post a Comment