Tuesday, February 17, 2015

என்னுயிர் சேடி கேளொரு சேதி ....!!!



நாள் தள்ளிப் போனதடி 
நாணம் என்னைத் தின்றதடி 
நானும் சேய்க்குத் தாயாக 
நாளும் கூடி வந்ததடி .....!! 

அங்க மெங்கும் சிலிர்த்ததடி 
அழகு மேனி கருத்ததடி 
அடி வயிறு அரித்ததடி 
அசை வெனக்குத் தெரிந்ததடி ....!! 

கிறக்கம் என்னை வதைத்ததடி 
குமட்டிக் கொண்டு வந்ததடி 
மாங்காய் கடிக்க இனித்ததடி 
சாம்பல் தின்ன பிடித்ததடி ......!! 

மயக்கம் நித்தம் வந்ததடி 
மசக்கை என்னை வறுத்ததடி 
வடித்த சோறு வெறுத்ததடி 
இருந்தாலும் மனம் துள்ளுதடி ....!! 

உலக உருண்டை போலுமென் 
உடலில் வயிறு பெருத்ததடி 
உருண்டு உள்ளே உதைத்ததடி 
உதையை உளமும் ரசித்ததடி ....!! 

நடையும் எனக்குத் தளர்ந்ததடி 
நடுக்கம் என்னுள் எழுந்ததடி 
ஆனாலும் என் மனமோ 
ஆனந்த யாழ் மீட்டுதடி ....!! 

பத்து மாத சுமையடி 
சுமை இதுவும் சுகமடி 
பூமலரும் நாள் காண 
பூவை மனம் ஏங்குதடி ....!! 

நலங்கில் மகிழ்ச்சி விளைந்ததடி 
வளை யோசை வசந்தமடி 
நலமுடன் பிள்ளை பெற்றெடுத்து 
நல்ல சேதி சொல்வேனடி ....!!!

No comments:

Post a Comment