Tuesday, February 17, 2015

காதலில் விழுந்தாள் .....!!!



தன்னைத் தானே ரசிக்கின்றாள் 
தனக்குள் தானே சிரிக்கின்றாள் 
காரணம் என்ன புரியாயோ 
காதலில் விழுந்தாள் அறியாயோ ...? 

கன்னம் சிவக்க நிற்கின்றாள் 
கண்கள் துடிக்கப் பார்க்கின்றாள் 
பூக்கள் பார்த்துப் பேசுகின்றாள் 
பூத்திட மனமும் சிலிர்க்கின்றாள் ...!! 

தனிமைக் கனவில் ஏங்குகின்றாள் 
தலைவன் கண்டு மயங்குகின்றாள் 
கற்பனை வானில் மிதக்கின்றாள் 
கல்யாணக் கோலம் காண்கின்றாள் ....!! 

கடிதம் எழுதிக் கிழிக்கின்றாள் 
கவிதை பலவும் படைக்கின்றாள் 
காலால் கோலம் போடுகின்றாள் 
காமனை வெல்லத் தவிக்கின்றாள் ...!! 

தென்றல் தீண்டலில் திளைக்கின்றாள் 
தெம்மாங்கு பாடலும் கேட்கின்றாள் 
மேகத்தை தூது விடுகின்றாள் 
மேனியும் வாட துவளுகின்றாள் ....!! 

நளினம் நடையில் கூட்டுகின்றாள் 
நகமும் அடிக்கடி கடிக்கின்றாள் 
நாணல் போலே வளைகின்றாள் 
நாணத்தால் முகம் சிவக்கின்றாள் ...!! 

பனியிலும் வியர்த்திடத் துடிக்கின்றாள் 
பகலிலும் குளிர்ந்திட நடுங்குகின்றாள் 
சாமத்தில் விழித்து யோசிக்கின்றாள் 
சாமியிடம் வரம் யாசிக்கின்றாள் ....!! 

இதயத்தில் ஊஞ்சல் ஆடுகின்றாள் 
இளமை சுகத்தை தேடுகின்றாள் 
மழலை கொஞ்சி மகிழ்கின்றாள் 
மன்னவன் கெஞ்சிட நடிக்கின்றாள் ....!!!

No comments:

Post a Comment