சலசலத்து ஓடும்நதியும்
துள்ளிவிழும் தேனருவியும்
நனைய ஏங்கும் உன்எழுத்தில் !
பனிசூழ்ந்த மலைமுகடும்
பச்சைப்பசேர் புல்வெளியும் உன்
பார்வைபட தவிக்கும் !
விண்ணிலவும் வெண்மேகமும்
வரிகளின் வருகைக்கு
வழிமேல் விழிவைக்கும் !
வயல்களும் வனங்களும்
வளைந்தோடும் சிற்றோடைகளும் -தம்மை
வர்ணிக்க வரம் கேட்கும் !
அலைகடலும் மலைமடுவும்
சிலையழகும் கலையெழிலும்-உன் பாவில்
அபிநயிக்கத் துடிக்கும் !
கொழுந்து விடும் அக்கினியும்
கொந்தளிக்கும் எரிமலையும்
அணைக்க வேண்டும் உன் தயவை !
மலர்களெல்லாம்
மயங்கிச் சிரிக்கும்
மன்னனுன் எழுத்துள் மலர !
கடைக்கண் நோக்குக்காக
ஒற்றைக்கால் தவமிருக்கும்
கொக்குடன் மற்றவையும் !
சரசர சாரப்பாம்பும்
சாமத்துக் கனவில்வந்து
சாமரம் வீசி நிற்கும் !
காதலுக்கே காதல்வந்து
கவியில் கலவி களிக்க
கெஞ்சி கொஞ்சும் !
இயற்கையே
உன்விரல் இடுக்கில்
உலவுகையில் உவகை கொள்ளும் !
எழுத்துகளும் உன் எழுத்தில்
எழுச்சி பெற்று
எம்பி குதிக்கும் !
மரப்பாச்சியும்
உயிர் பெறும் -உன்
கவிதைத் தீண்டலில்...!
கவிப்பேரரசே உம் எழுத்து
கேட்பதைக் கொடுக்கும்
கற்பகத் தருவோ ?
எடுக்க ஊறும் அமுதசுரபியோ ?
வைரமுத்தே !
உனைச் சேர்வதில்
விருதுகளுக்கே விருந்து !
முதல் விருது பொன்மணியே !
இருபுறம் பத்மங்கள் அலங்கரிக்க
ரத்னா உனை அடைய
நாள்பார்த்து காத்திருக்கிறாள் !!
No comments:
Post a Comment