Tuesday, February 17, 2015

வடுகப்பட்டி வைரமே ....!!!



சலசலத்து ஓடும்நதியும் 
துள்ளிவிழும் தேனருவியும் 
நனைய ஏங்கும் உன்எழுத்தில் ! 

பனிசூழ்ந்த மலைமுகடும் 
பச்சைப்பசேர் புல்வெளியும் உன் 
பார்வைபட தவிக்கும் ! 

விண்ணிலவும் வெண்மேகமும் 
வரிகளின் வருகைக்கு 
வழிமேல் விழிவைக்கும் ! 

வயல்களும் வனங்களும் 
வளைந்தோடும் சிற்றோடைகளும் -தம்மை 
வர்ணிக்க வரம் கேட்கும் ! 

அலைகடலும் மலைமடுவும் 
சிலையழகும் கலையெழிலும்-உன் பாவில் 
அபிநயிக்கத் துடிக்கும் ! 

கொழுந்து விடும் அக்கினியும் 
கொந்தளிக்கும் எரிமலையும் 
அணைக்க வேண்டும் உன் தயவை ! 

மலர்களெல்லாம் 
மயங்கிச் சிரிக்கும் 
மன்னனுன் எழுத்துள் மலர ! 

கடைக்கண் நோக்குக்காக 
ஒற்றைக்கால் தவமிருக்கும் 
கொக்குடன் மற்றவையும் ! 

சரசர சாரப்பாம்பும் 
சாமத்துக் கனவில்வந்து 
சாமரம் வீசி நிற்கும் ! 

காதலுக்கே காதல்வந்து 
கவியில் கலவி களிக்க 
கெஞ்சி கொஞ்சும் ! 

இயற்கையே 
உன்விரல் இடுக்கில் 
உலவுகையில் உவகை கொள்ளும் ! 

எழுத்துகளும் உன் எழுத்தில் 
எழுச்சி பெற்று 
எம்பி குதிக்கும் ! 

மரப்பாச்சியும் 
உயிர் பெறும் -உன் 
கவிதைத் தீண்டலில்...! 

கவிப்பேரரசே உம் எழுத்து 
கேட்பதைக் கொடுக்கும் 
கற்பகத் தருவோ ? 
எடுக்க ஊறும் அமுதசுரபியோ ? 

வைரமுத்தே ! 
உனைச் சேர்வதில் 
விருதுகளுக்கே விருந்து ! 

முதல் விருது பொன்மணியே ! 
இருபுறம் பத்மங்கள் அலங்கரிக்க 
ரத்னா உனை அடைய 
நாள்பார்த்து காத்திருக்கிறாள் !!

No comments:

Post a Comment