Wednesday, June 28, 2017

மீட்டிடுவேன் அன்பாலே ...!!!



மலரோடு மலரானாள்
    மனத்தோடு மணமானாள்
நிலத்தோடு நடைபோடும் 
    நிழலாகத் துணையானாள்
புலர்காலைப்  பொழுதினிலே 
    புதுக்கவிதை போலானாள்
உலவாத மலைமீதில் 
    உருமாறும் முகிலானாள் !

இரவோடு நிலவானாள்
    இதயத்தின் துடிப்பானாள்
சுரமெழுள் ஒலியானாள்
    சுகமான இசையானாள்
பிரதான மூச்சானாள்
    பிரியமான  சகியானாள்
விரலோடு வீணையைப்போல் 
     விளையாடும் உறவானாள் !

துவளாத கொடியானாள்
     துவர்க்காத கனியானாள்
கவலைக்கு மருந்தானாள்
     கருணைக்கு மொழியானாள்
உவமைக்குக் கருவானாள்
     உயிருக்கும் உயிரானாள்
புவனத்தில் பூப்போலே 
    பொலிவான பெண்ணானாள் ! 

வயலோடு வளிவீச 
    வருடிவிடும் சிலிர்ப்பினைப்போல் 
கயலாடும் விழியாலே 
    காதலுடன் அவள்பார்க்க
மயங்கிவிட்ட இதயத்தால் 
   மன்மதனாய்க் கிறங்கிநின்றேன் 
வியக்கவைக்கும் மெல்லிசையாய் 
     மீட்டிடுவேன் அன்பாலே  !!!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment