Friday, June 9, 2017

காட்சிக்கேற்ற கானம் ....!!!


வளிவருடி உளம்நனைக்க வான்மழையோ உடல்நனைக்க 
களிப்பினிலே உயிர்நனைய கலந்தினிக்கும் காதலுடன் 
கிளிமொழியாள் அருகிருக்க கிளுகிளுப்பில் மனம்துவள 
நெளிந்தசையும் மரஞ்செடியை நெக்குருகி ரசித்தனரோ ?

அலைகடலின் ஓரத்திலே அழகியதோர் வெளியினிலே 
கலைகொஞ்சும் சிற்பங்கள் கவின்கோயில் கண்டிடவே 
சிலைபோலும் கன்னியுடன் சிலிர்ப்புடனே கரங்கோர்த்து 
மலைப்போடு குடைக்குள்ளே மனம்நெகிழ நடந்தனரோ  ?

மல்லையிலே எழில்கொஞ்சி மண்பெருமை தனைச்சொல்லும் 
பல்லவனின் கலைத்திறனைப்  பாருக்குப் பறைசாற்றும்
கல்லழகைக் காணவந்த காதலரின் நல்வாழ்வும் 
வெல்லட்டும் இனிதாக மேதினியில் வாழ்த்துவமே !!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment