Thursday, July 6, 2017

பாசமலரே ..... ராஜகுமாரா ....!!!

ராஜகுமாரா .....!!!!
**************************

மறைந்தேநீ  போனாலும் மறந்திடவே  இல்லையடா 
உறைந்துவிட்டாய் உள்ளத்தில் உயிருருகித் துடிக்குதடா 
இறைநிலையை எட்டிவிட்டாய் இரவுபகல் துணையிருப்பாய்  
குறையின்றிக் காத்திடுவாய் குலம்விளங்கச் செய்திடுவாய் !

ஆண்டொன்று போனாலும் ஆறுதலே இல்லையடா 
காண்பதெல்லாம் உன்னுருவாய்க் கண்முன்னே தோன்றுதடா 
தூண்போலத் தாங்கிநின்றாய் துயரின்றி மகிழ்ந்திருந்தேன் 
மீண்டுமுனைத் தரிசிக்க விழியிரண்டும் ஏங்குதடா !

நீயில்லா உலகத்தில் நெஞ்சத்தில் அமைதியில்லை 
கோயிலுக்கும் செல்லவில்லை கொண்டாட்டம் ஏதுமில்லை 
தீயிடையே மெழுகினைப்போல் தினந்தினமும் உருகுகின்றேன்  
வாயிருந்தும் பேச்சுவர மறுப்பதைநீ  அறியாயோ ?

சமைத்தாலும் ருசிக்கவில்லை சாப்பிடவும் மனமில்லை 
இமைக்கதவை மூடிடினும் இதமான உறக்கமில்லை 
சுமையான பயணத்தில் சுரத்தின்றித் தவிக்கின்றேன் 
அமைதியினை அளித்திடவே அருவமாயென் அருகிருப்பாய் !

வற்றாத கருணையுடன் வள்ளலைப்போல் வாழ்ந்தவனே 
சற்றேனும் இளகாயோ தைரியத்தை வழங்காயோ 
பெற்றவளென் துயர்கண்டால் பிரிவுக்கும் அழுகைவரும் 
பற்றதிகம் வைத்ததனால் பரிதவித்துக் கிடக்கின்றேன் !

உற்றாரோ(டு) உறவினரும் உனைநினையா நாளில்லை 
கற்பிப்பாய் மேலிருந்தே கடமைகளை ஆற்றிடவே 
நற்றமிழால் வாழுகிறேன் நனைந்தவுளம் தேறுகிறேன் 
மற்றெதுவும் வேண்டுகிலேன் வழிகாட்டு கண்மணியே  ....!!!

அம்மா 
சியாமளா ராஜசேகர் 




No comments:

Post a Comment