Thursday, June 22, 2017

என்னோடு கலந்துவிடு !!!


மான்விழியாள் பார்வையிலே மைய லானேன் 
     மயங்கவைக்கும் மொழிவீச்சில் மௌன மானேன் 
தேன்கவிதை அவள்நினைவில் வனைய லானேன்
    தேவதையாள் கவினழகை வரைய லானேன்  
வான்மிதக்கும் வெண்முகிலே தூது செல்வாய்
    வண்ணமுடன் என்னுள்ளம் எடுத்துச் சொல்வாய்  
ஏன்படுத்து கின்றாளோ தெரிய வில்லை 
    என்னவளும் அறியாளோ அன்பின் எல்லை ??

அன்னநடை பயின்றுவரும்  அழகின் உச்சம் 
    அபிநயிக்கும் அசைவுகளில் தெரியும் மிச்சம் 
 பொன்மயிலாள் செவ்விதழோ மதுவின் கிண்ணம் 
     புன்சிரிப்பில்  தும்பைப்பூ தோற்கும் திண்ணம் 
கன்னத்தின் குழியழகில் வீழும் உள்ளம் 
     காட்டாறாய்ப் பெருக்கெடுக்கும் மகிழ்ச்சி வெள்ளம் 
இன்னிசையாய் மனம்வருடும்  இதயப் பூவே 
     என்னோடு கலந்துவிடு மெய்யாய் இன்றே !



      

No comments:

Post a Comment