Thursday, May 17, 2018

மழை வருவதை ....!!!

மழைவருவதை விரிவிசும்பினில் கருமுகில்களும் விளம்பும்
***மரமசைந்திட வளிவருடிட மயில்நடமிட விரும்பும் !
முழங்கிடுமிடி முகிலுரசிட ஒலிசெவிகளை உரசும்
***முடுகிடுமொளி கிளைவரியுடன் தகதகவென மினுக்கும் !
தழைத்திடும்பயிர் பெயல்பொழிவினில் நிலம்நனைந்தது செழிக்கும் 
***தரணியிலுயிர் பிழைத்திடும்வழி கிடைத்திடமனம் மகிழும் !
கழனியில்பசும் பயிர்வளம்பெறும் வனமெழிலுற விளங்கும்
***கனிகுலுங்கிடும் மரக்கிளைகளில் இளங்கிளிகளும் குலவும் !!
கரைபுரள்நதி சலசலவென நுரைததும்பிட வோடும்
***கயல்களுமதில் நனியழகுடன் தவழலைகளில் நீந்தும் !
விரைவுடன்செலும் வழிநெடுகிலும் மலர்களைமரம் தூவும்
***விடிந்திடும்வரை மணம்பரவிட இருளுடன்கதை பேசும் !
நுரையொதுங்கிடும் கரையினில்மணல் வெளியினிலெழில் கொஞ்சும்
***நொடிக்கொருதரம் தலையசைத்திடும் செடிமயக்கிடும் நெஞ்சம் !
இரவினில்நதி யலைகளில்படும் பிறைநிலவொளி மின்னும்
***இதமளித்திடும் சிலிர்ப்பினிலுளம் மிகவிரும்பிடும் இன்னும் !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment