Thursday, May 17, 2018

கருவிற் சுமந்தவள் ...கடவுள் வடிவினள் ....!!!

அடக்க முடியுமோ அளக்க முடியுமோ
***அன்னை யன்பை அவனியில் ?
உடலும் தந்தவள் உயிரும் தந்தவள்
***உதிரப் பாலை ஈந்தவள் !
தொடக்க நாள்முதல் தன்னை வருத்தினும்
***சுமையைச் சுகமாய் நினைப்பவள் !
இடர்கள் களைந்தவள் இன்பம் கூட்டுவாள்
***என்றும் அவளுக் கீடிலை !
கருவிற் சுமந்தவள் கடவுள் வடிவினள்
***கனிந்த பாசத் துணையவள் !
இருளில் ஒளியவள் வெயிலில் நிழலவள்
***இதயம் நிறைந்த உணர்வவள் !
குருவாய்த் திகழ்பவள் குழந்தை மனத்தினள்
***குணத்தில் பரந்த கடலவள் !
வருத்தும் கவலைகள் அன்னை தேற்றிட
***மனத்தை விட்டே மறைந்திடும் !
பிள்ளைச் சிரிப்பினில் இதயம் சிலிர்ப்பவள்
***பெற்ற வயிறும் குளிர்பவள் !
அள்ளி யணைத்தவள் சொல்லும் ஆறுதல்
***அகற்றும் துன்பச் சுவட்டினை !
உள்ளம் மலர்ந்தவள் வாழ்த்தும் வாழ்த்தினில்
***உயரம் எட்டச் செய்பவள் !
கள்ள மறியாக் கருணை உளத்தினள்
***கண்கள் பனிக்கும் நினைக்கையில் !!
அன்னையர் தின வாழ்த்துகள் !!

No comments:

Post a Comment