Thursday, May 3, 2018

வளையற்சிந்து...!!!

வேலைப்போற்றி வணங்கிடவே
வெற்றிவந்து சேரும் - மன
வேதனைகள் தீரும் - மிக 
வெந்தவுளம் ஆறும் - வடி
வேலவனின் திருவருளால்
மேன்மைகிட்டும் வாரும் !!
சோலைமலை மீதினிலே
தோகைமயில் உண்டு - அது
சுற்றியாடும் நின்று - மனம்
சொக்கிவிடும் கண்டு - மதி
சூடியோனின் மைந்தனையே
தூக்கிச்செய்யும் தொண்டு !!
காவடிகள் ஆடிவரக்
கண்டமனம் துள்ளும் - அது
கள்ளமின்றிச் செல்லும் - நிதம்
கந்தன்நாமம் சொல்லும் - எக்
காலத்திலும் துணையிருந்து
காவலனாய் வெல்லும் !!
சேவற்கொடி யோனைநிதம்
சேவித்திட வாரீர் ! - திருச்
செந்தூரிலே பாரீர் - இரு
தேவியரைக் காணீர் - தினம்
தித்திக்கின்ற செந்தமிழில்
சீர்மிகவே பாடீர் !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment