Thursday, May 3, 2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ...!!!

முத்துநகர் சுவாசிக்கும் மூச்சுக் காற்று
***முழுவதுமே நச்சாக மாறிப் போனால் 
நித்தநித்தம் கண்ணீரில் போகும் காலம்
***நெஞ்சத்தைச் சுட்டெரிக்கும் நோயின் கோலம் !
யுத்தமின்றி மொத்தமாக மக்கள் மாய்வர்
***யோசித்துக் குரல்கொடுப்போம் கூடி ஒன்றாய் !
அத்தனைக்கும் காரணமாம் ஸ்டெர்லைட் என்ற
***ஆலைக்கு மூடுவிழா நடக்கச் செய்வோம் !!
உயிர்வளியும் நிலம்நீரும் மாசு பட்டே
***உயிருக்கே உலைவைக்கும் அவலம் கண்டோம் !
உயிர்குடிக்கக் காத்திருக்கும் புற்று நோயால்
***ஊர்மக்கள் படுந்துன்பம் நேரில் கண்டோம் !
உயிரான உறவுகளை இழந்து வாடி
***உறைந்துவிட்ட சோகத்தைக் கண்ணில் கண்டோம் !
உயிர்பறிக்கும் ஸ்டெர்லைட்டால் அச்சத் தோடே
***உலவுகின்ற நிலைமாற்றிக் காட்டு வோமே !
ஈரமன மில்லாத வீண ராலே
***இழப்புகளோ ஏராளம் நாளு மிங்கே !
பேரழிவு ஏற்படுமுன் விழித்துக் கொண்டு
***பேரிகையாய் முழங்கிடுவோம் பாரோர் காதில் !
நேரத்தைக் கடத்தாமல் கைகள் கோப்போம்
***நிறைவேற்ற ஒருமனதாய்ச் சபதம் செய்வோம் !
வீரமென்றும் தமிழருக்குச் சொந்த மன்றோ
***வெகுண்டெழுந்து விரட்டிடுவோம் ஊரை விட்டே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment