Sunday, December 11, 2016

முத்துக் குமரா வருக வருக ...!!!





முதிரா யிளமை யோடே யென்றும் 
****முத்தா யொளிரும் முத்துக் குமரன் !
துதிக்கு மடியார் துயரைத் துடைக்க 
****துள்ளி குதித்தே ஓடி வருவான் !
விதியை மாற்றி விளங்க வைப்பான் 
****வீடு பேற்றை விரும்பி அருள்வான் !
கதியே நீதா னென்றா லவனும் 
****கண்ணீர்த் துடைக்கக் கடிதே வருவான் !

குருகு கொடியைக் கையி லேந்திக்
****கோல மயிலில் குளிர்ந்தே வருவான் !
உருகி யழைத்தால் உள்ள மினிக்க 
****உவகை யோடு காட்சி கொடுப்பான் !
முருகா வென்றால் முன்னே நிற்பான் 
****முடியாச் செயலை  முடித்து வைப்பான் !
விருத்தம் பாடி வெண்ணீ றணிய 
****விரைந்து வந்தே வினைகள் தீர்ப்பான் !

குறைகள் களைய குகனே வருக 
****குன்றி லமர்ந்த கோவே வருக !
மறைகள் போற்று மழகா வருக  
****வள்ளி மணாளா வருக வருக !
நிறைந்த மனத்தில் நிமலா வருக 
****நெஞ்சம் கனிந்து தயவாய் வருக !
இறைவா நீயும் இனிதே வருக 
****ஈசன் மகனே இசைந்தே வருக !


No comments:

Post a Comment