Friday, July 24, 2015

துன்பத்தில் நிற்பாள் துணை ....!!!



கூப்பிடுமுன் ஓடிவந்து கோலவிழி காட்டிடுவாள் 
வேப்பிலையின் வாசமுடன் வேண்டுவன தந்திடுவாள் 
பக்திசெயும் அன்பர்தம் பல்வினைகள் ஓட்டிடுவாள் 
சக்தியவள் யாவர்க்கும் தாய் .

தாயாய்ப் பரிந்து தயவாய் அருள்புரிவாள் 
நோயாய்க் கிடந்தால் நொடிக்குள் அரவணைப்பாள்
அன்பால் விழிவழிய அன்னையவள் தானுருகி 
துன்பத்தில் நிற்பாள் துணை .

மங்கள ரூபிணி மாங்கல்யம் காத்திடுவாள் 
செங்கமல வல்லியவள் சீராட்டத் தாங்கிடுவாள் 
சங்கரி சௌந்தரி சர்வ நிவாரணி 
அங்கயற் கண்ணி அருள் .

ஆடிவெள்ளி நாளினிலே ஆலயத்தில் பொங்கலிட்டு 
கூடிநின்ற பெண்கள் குலவையிட்டுக் கும்பிட 
நாடிவந்து நல்லாசி நல்குவதே தாயவள்தம்  
வாடிக்கை யென்றேக்கொள் வாள் 

கற்பூர ஜோதியில் கண்டேனே உன்னழகை 
பொற்பதம் பற்றியேப் போற்றிடுவேன், என்றன்
மயக்கம் தெளிவித்து மாயை யகற்றி
பயமும் களைவாய்ப் பரிந்து .

No comments:

Post a Comment