கூப்பிடுமுன் ஓடிவந்து கோலவிழி காட்டிடுவாள்
வேப்பிலையின் வாசமுடன் வேண்டுவன தந்திடுவாள்
பக்திசெயும் அன்பர்தம் பல்வினைகள் ஓட்டிடுவாள்
சக்தியவள் யாவர்க்கும் தாய் .
தாயாய்ப் பரிந்து தயவாய் அருள்புரிவாள்
நோயாய்க் கிடந்தால் நொடிக்குள் அரவணைப்பாள்
அன்பால் விழிவழிய அன்னையவள் தானுருகி
துன்பத்தில் நிற்பாள் துணை .
மங்கள ரூபிணி மாங்கல்யம் காத்திடுவாள்
செங்கமல வல்லியவள் சீராட்டத் தாங்கிடுவாள்
சங்கரி சௌந்தரி சர்வ நிவாரணி
அங்கயற் கண்ணி அருள் .
கூடிநின்ற பெண்கள் குலவையிட்டுக் கும்பிட
நாடிவந்து நல்லாசி நல்குவதே தாயவள்தம்
வாடிக்கை யென்றேக்கொள் வாள்
கற்பூர ஜோதியில் கண்டேனே உன்னழகை
பொற்பதம் பற்றியேப் போற்றிடுவேன், என்றன்
மயக்கம் தெளிவித்து மாயை யகற்றி
பயமும் களைவாய்ப் பரிந்து .
No comments:
Post a Comment