Wednesday, July 8, 2015

இன்றைக்கு வேண்டும் இது .....!!!

விலைவாசி குறைய வேண்டும் 
***விலையில்லாக் கல்வி வேண்டும் 
நிலையான கொள்கை வேண்டும் 
***நெஞ்சத்தில் உறுதி வேண்டும் 
குலைநடுங்க குண்டு வைக்கும் 
***கொடுமைகளும் மாள வேண்டும் 
கலைமகளின் அருளால் இங்கு 
***கவிபாடும் ஆற்றல் வேண்டும் ...!!! 

மடலெழுதி அஞ்சல் செய்யும் 
***மனமகிழ்ச்சி மீண்டும் வேண்டும் 
வடகங்கை தெற்கில் பாய்ந்து 
***வளமைதனைக் கூட்ட வேண்டும் 
தடங்கலின்றி வேளை மூன்றும் 
***தண்ணீர்,மின் சாரம் வேண்டும் 
உடலுறுப்பு தானம் செய்யும் 
***உறுதிமொழி எடுக்க வேண்டும் ...!!! 

பெற்றெடுத்த தந்தைத் தாயை 
***பேணிடும்,நல் லிதயம் வேண்டும் 
கற்றறிந்தோர் அவையில் நானும் 
***கற்றவற்றை உரைக்க வேண்டும் 
நற்றமிழில் கதைக்க வேண்டும் 
***நயமுடனே சொல்ல வேண்டும் 
வெற்றிடமாய் இருக்கும் நெஞ்சை 
***மெய்யன்பால் நிரப்ப வேண்டும் ...!!! 

மும்மாரி பொழிய வேண்டும் 
***முப்போகம் விளைய வேண்டும் 
எம்மதமும் போற்ற வேண்டும் 
***எழுத்தினிலே ஏற்றம் வேண்டும் 
செம்மொழியாம் தமிழைப் பாரில் 
***செழுமைபெறச் செய்ய வேண்டும் 
தெம்மாங்குப் பாட்டில் நெஞ்சம் 
***தெளிவடைந்து மகிழ வேண்டும் ...!!! 

பிணியில்லா உடலும் வேண்டும் 
***பிணக்கில்லா வாழ்க்கை வேண்டும் 
கணிணியிலே புலமை வேண்டும் 
***கற்பிக்க இலந்தை வேண்டும் 
பணியிடத்தில் நேர்மை வேண்டும் 
***பகுத்தறியும் தன்மை வேண்டும் 
துணிச்சலுடன் பெண்கள் நாட்டில் 
***தொல்லைகளைத் துரத்த வேண்டும் ...!!! 

நிலமகளை மலடாக் காமல் 
***நெகிழிதனை ஒழிக்க வேண்டும் 
விலங்குகளை வேட்டை யாடும் 
***மிருகத்தனம் மடிய வேண்டும் 
நலத்திட்டம் அரசு தீட்டி 
***நலிவுற்றோர் பேண வேண்டும் 
புலம்பெயர்ந்த தமிழர் உள்ளம் 
***பூரிப்பில் விரிய வேண்டும் ...!!! 

வனங்களையும் காத்து மண்ணில் 
***மழைவளத்தைப் பெருக்க வேண்டும் 
இனக்கொலைக்கு முற்றுப் புள்ளி 
***இட்டிடவே வேண்டும் வேண்டும் 
மனவுளைச்சல் போக்க நாட்டில் 
***மதுவிலக்கு என்றும் வேண்டும் 
கனவினிலேக் கண்ட காட்சி 
***கண்முன்னே நடக்க வேண்டும் ...!!! 

கறையில்லாக் கரமும் வேண்டும் 
***கையூட்டு ஒழிய வேண்டும் 
குறைவற்ற செல்வம் வேண்டும் 
***கொடுத்துதவும் குணமும் வேண்டும் 
மறையெங்கும் ஒலிக்க வேண்டும் 
***மனிதமிங்கேப் பூக்க வேண்டும் 
இறையெண்ணம் நாளும் வேண்டும் 
***இறையருளால் சிறக்க வேண்டும் ...!!!

No comments:

Post a Comment