Sunday, September 17, 2017

புரட்டாசி ....!!


ஆவணிக்குப் பின்புவரும் ஆன்மீகத் திங்களிது 
ஆவலுடன் பித்ருக்கள் அவனிவரும் காலமிது 
நாவாரப் புகழ்பாடி நாடிவரும் பக்தரது 
பாவங்கள் விலகியோட பரந்தாமன் அருள்மாதம் !

புரட்டாசி நற்திங்கள் புண்ணியங்கள் பலசேர்க்கும் 
பரம்பொருளே பிறப்பெடுத்த பவித்ரமான மாதமிது 
பிரம்மோற்சவம் நடக்கும் பெருமாளின் தலமெங்கும் 
விரதங்கள் இருப்பதனால் வேண்டுகின்ற வரம்கிட்டும் !

கோவிந்தா எனும்நாமம் கோயிலெங்கும் எதிரொலிக்கச் 
சேவிக்க வருவோர்க்குத் தெய்வீக அருள்கூடும் 
தீவினைகள் விலகியோடும் தேவனவன் சன்னதியில் 
தூவிமலர் போற்றிடுவார் தூய புரட் டாசியிலே !

அன்னைசக்தி மகிஷனெனும் அரக்கனுடன் போரிட்டு 
வென்றதனைப் பக்தியுடன் விரதமிருந்து வழிபட்டே  
ஒன்பதுநாள் கொண்டாடும் ஒப்பற்ற நவராத்ரி 
பொன்னொளிர விளங்கிடுமே புரட்டாசி மாதத்தில் !

மலைமகளும் அலைமகளும் மகிழ்வுடனே கலைமகளும் 
குலையாத எழிலுடனே குடியிருக்கும் மாதமிது 
சிலையுருவாய்க் கொலுவீற்றுச் சிறப்பாக வரந்தந்து 
நிலையில்லா வாழ்வினிலும் நிறைவளிக்கும் திங்களிது !

கார்மேகம் திரண்டுவரும் கார்கால மாதமிது 
ஏருழவன் உள்ளமெலாம் இனிதாகும் காலமிது 
நீர்நிலைகள் குளிர்ச்சியுடன் நிரம்பியோடும் திங்களிது 
மார்தட்டி முழங்கிடுவேன் மகத்தான மாதமிதே !

No comments:

Post a Comment