Wednesday, September 13, 2017

பொன்னந்தி மாலையிலே ...!!!



பொன்னந்தி மாலையிலே
பொங்கிவரும் பாட்டு! - உன்
புன்னகையில் தான்மயங்கிப்
பூத்ததுள்ளம் கேட்டு !
தென்றலுடன் ஆடிடுதே 
தென்னையிளங் கீற்று - பேசும்
செவ்வலகு கிள்ளையொன்று
சித்திரம்போல் வீற்று !!
செம்மஞ்சள் சூரியனும்
செல்லும் விடைபெற்று ! - அந்த
செம்மாந்தப் பேரொளியோ
செம்பவளத் தட்டு !
நம்மிதயம் சேர்ந்திணையும்
நாளினில்கை தொட்டு - நம்
நற்றமிழில் சொல்லெடுத்து
நானிசைப்பேன் மெட்டு !
கூடடையும் தாய்வரவில்
குஞ்சுமுகம் பூக்கும் - அதன்
கொஞ்சுமொழி கேட்டவுடன்
கூர்விழியால் பார்க்கும் !
ஓடமொன்று அக்கரையில்
ஓசையின்றிச் சேர்க்கும் ! -அதை
ஒட்டிவரும் சேல்கெண்டை
உள்ளமதை யீர்க்கும் !!
கார்மேகம் கண்டமயில்
கலாபம் விரித்தாடும் ! - அந்த
காட்சியினைக் கண்டமனம்
காதலியை நாடும் !
சீர்மிகுந்த வெண்ணிலவை
திரையிட்டு மூடும் - முகில்
திங்களொளி பட்டதுமே
சேர்த்தணைக்கத் தேடும் !!
கோலநிலா மீன்களுடன்
கூடியெழில் காட்டும் ! - அது
கும்மிருட்டு வந்தபின்னும்
குலவியொளி கூட்டும் !
சோலைமலர் வாசமது
துன்பத்தை ஓட்டும் !- என்
சுந்தரியே உன்நினைவோ
சொர்க்கத்தைக் காட்டும் !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment