Thursday, December 17, 2015

அரும்புகள் !!



பையைத் தோளில் சுமந்திடும் 
***பள்ளிச் செல்லும் அரும்புகள் ! 
கையை யாட்டி நடந்திடும் 
***கட்டிச் சுட்டி எறும்புகள் ! 
சைகை யாலே பாவனை 
***சாலச் செய்யும் குறும்புகள் ! 
வைகை யோர நாணலாய் 
***வளைந்துக் கொடுக்கும் கரும்புகள் ! 

சோக முற்ற வேளையில் 
***சோர்வு நீக்கும் ஔடதம் ! 
தேகம் தளரும் போதிலே 
***தேற்று விக்கும் யௌவனம் ! 
நோக வைக்க அறிந்திடா 
***நுட்ப மான சௌந்தரம் ! 
வேகம் நிறைந்த வாழ்விலே 
***வெற்றி கூட்டும் மந்திரம் ! 

மழலைப் பேச்சில் மயக்கிடும் 
***மனத்தில் மகிழ்ச்சி நிறைத்திடும் ! 
பழகப் பழக இனித்திடும் 
***பாலும் கூடப் புளித்திடும் ! 
அழகில் முல்லை தோற்றிடும் 
***அகத்தில் சிலிர்ப்புத் தோன்றிடும் ! 
குழவி யுள்ள வீட்டிலே 
***குடும்ப உறவும் சொர்க்கமே !

No comments:

Post a Comment