Thursday, December 17, 2015

குறட்பா வித்தகம் !

பருவ வயதில் பளிங்கு முகத்தில் 
அரும்பு மழகாய்ப் பரு. 

கனிவாய்ப் பழகிடும் கன்னி யிதழின் 
இனிப்பினில் தோற்கும் கனி. 

குவிந்த அரும்பும் விரிந்திடக் கண்டு 
கவிதை யெழுதிக் குவி. 

கதிரின் வரவில் கமலம் மலரும் 
உதித்திடு நீயே கதி ! 

இனிமை ததும்பும் இளமை நினைவு 
கனிந்து வருமோ இனி ? 

குளிரும் நடுக்கக் குளத்தி லிறங்கிக் 
களிப்புற முங்கிக் குளி . 

எழுவாய் பயனிலை யாவு மழகாய் 
எழுதிப் பழக எழு . 

தொழுவத்தில் கட்டி யிருக்கும் பசுவை 
எழுந்ததும் கண்டுத் தொழு . 

படியேறிச் சென்று பகவானை வேண்டித் 
துடிப்புடன் பாடம் படி . 

கொடுமையைக் கண்டால் கொதித்துக் கிளர்ந்துக் 
கடுந்தண்ட ணையைக் கொடு . 

*************************************************************************** 
குறட்பா வித்தகம் : முதற்சொல் முடிவில் 
************************** 
[இந்த உத்தியில் முதற்சீரில் வரும் சொல் ஈற்றுச் சீர்களில் 
வேறு பொருளில் வரும்.]

No comments:

Post a Comment