Monday, December 21, 2015

சுவடாய் நெஞ்சில் பதியுமோ ....??




கொட்டித் தீர்த்த மழையினால் 
***கொதித்துப் போன துள்ளமே ! 
கட்டு டைத்த ஏரியால் 
***கலங்கிப் போச்சு நகரமே ! 
திட்ட மில்லாச் செய்கையால் 
***தேடிக் கொண்டோம் அழிவையே 
பட்ட பின்னே புரிந்தது 
***பாடம் கற்றுக் கொடுத்தது ! 

ஏரி வழியை மறித்திடல் 
***ஏற்பு டைய செய்கையோ ? 
மாரி மீது பிழையிலை 
***மக்கள் செய்த குற்றமே ! 
நேரில் கண்டக் காட்சியோ 
***நெஞ்சை உலுக்கி விட்டது 
பேரி ழப்பைக் கண்டதும் 
***பேத லித்துப் போனது ! 

அரசின் மெத்தப் போக்கினால் 
***அழிவு அதிக மானதே ! 
வரவுக் கென்ன செய்வது 
***வாட்டம் மனதை அரித்ததே 
கரங்கள் நீட்டும் உதவியால் 
***கண்கள் பனித்து வடிந்ததே ! 
மரத்துப் போன நிலையிலும் 
***மனிதம் மண்ணில் பூத்ததே ! 

கட்டுக் கட்டாய் இருப்பினும் 
***காசு செல்ல வில்லையே ! 
கட்டுச் சாதம் வருமெனக் 
***காத்தி ருப்பும் கொடுமையே ! 
விட்டு வந்தப் பொருளெலாம் 
***வீணாய்ப் போன வேளையில் 
சுட்ட நினைவு ஆறுமோ 
***சுவடாய் நெஞ்சில் பதியுமோ ??

1 comment:

  1. அருமையான கவிதை!

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி!
    http://www.friendshipworld2016.com/

    ReplyDelete