Wednesday, October 14, 2015

நீங்கா திருப்பாய் நிறைந்து .....!!! ( அந்தாதி வெண்பாக்கள் )

கருணை விழியால் கனிவுடன் நோக்கி 
வருந்துயர் போக்குவாள் மாரி !- விரும்பி 
வணங்கு மடியவர் வாழ்வி னொளியாய்
இணங்கி யருள்வாள் இனிது . 

இனியவள் காட்டிடும் ஈடிலா அன்பில் 
பனித்திடும் கண்கள் பரிவாய் !- செனித்த 
பிறவியில் தாயவள் பேரருள் கிட்ட 
சிறந்திடும் வாழ்வும் தெளிந்து .

தெளிந்த அறிவுடன் தேவியை எண்ண
எளிதாய் வருவாள் இறங்கி ! - ஒளிரும் 
சுடரிலும் தோன்றியே சூலினி காப்பாள் 
இடர்வரின் சிட்டாய் எழுந்து .

எழுந்தோடி வந்தாய் எளியேனைக் காக்க 
தொழுதவென் துன்பம் தொலைத்தாய் ! - விழுதாகத் 
தாங்கினாய்த் தாயே! தயாபரியே! என்றென்றும் 
நீங்கா திருப்பாய் நிறைந்து .

No comments:

Post a Comment