Sunday, June 7, 2015

காலத்தை வென்ற கவி



கற்பனைக் கெட்டாக் களஞ்சியமே கண்ணதாசா!
நற்கவி தந்திட்ட நாயகனே! - பெற்றோம் 
பெரும்பேறு, நின்றன் பிரவாகப் பாக்கள் 
திருவாய் வடித்திடும் தேன். 

முத்துக்கள் ஒவ்வொன்றும் முத்தையா நின்பாடல்
சொத்தாகும், வாசிப்போர் சோர்வகற்றும் - தித்திக்கும் 
தேன்பாக்கள் உள்ளத்தைத் தென்றலாய்த் தாலாட்டும் 
மேன்மையாய் ஓங்கும் மிளிர்ந்து. 

இளமை ததும்ப இதமாய் வருடும் 
வளமை வரிகளால் வாழும் - உளமும் 
குளிரும் உவகையுங் கொள்ளும், எழுத்தில் 
களிக்கும் இதயங் கனிந்து.

காலங் கடந்தாலும் காற்றில் கலந்தொலிக்கும்
ஞாலம் முழுதிலும் நாதமாய்! - கோலமாய் 
நெஞ்சில் பதிந்திடும் நீங்கா நினைவுகளாய் 
தஞ்ச மடையும் தகவு.

No comments:

Post a Comment