கற்பனைக் கெட்டாக் களஞ்சியமே கண்ணதாசா!
நற்கவி தந்திட்ட நாயகனே! - பெற்றோம்
பெரும்பேறு, நின்றன் பிரவாகப் பாக்கள்
திருவாய் வடித்திடும் தேன்.
முத்துக்கள் ஒவ்வொன்றும் முத்தையா நின்பாடல்
சொத்தாகும், வாசிப்போர் சோர்வகற்றும் - தித்திக்கும்
தேன்பாக்கள் உள்ளத்தைத் தென்றலாய்த் தாலாட்டும்
மேன்மையாய் ஓங்கும் மிளிர்ந்து.
இளமை ததும்ப இதமாய் வருடும்
வளமை வரிகளால் வாழும் - உளமும்
குளிரும் உவகையுங் கொள்ளும், எழுத்தில்
களிக்கும் இதயங் கனிந்து.
காலங் கடந்தாலும் காற்றில் கலந்தொலிக்கும்
ஞாலம் முழுதிலும் நாதமாய்! - கோலமாய்
நெஞ்சில் பதிந்திடும் நீங்கா நினைவுகளாய்
தஞ்ச மடையும் தகவு.
No comments:
Post a Comment