Tuesday, June 23, 2015

இணையத் தமிழே இனி ....!!



இணையத் தமிழே இனிய வரமாம் 
துணைவரும் என்றென்றும் துய்க்க - இணையிலாத் 
தன்மையால் தாயாய்த் தரணியை ஆண்டிடும் 
தொன்மைத் தமிழே தொடர்ந்து .

வியக்கும் வகைதனில் விஞ்ஞான ஞானம் 
உயர்த்தும் தொழில்நுட்பம் ஓம்பி - நயமாய் 
இதழ்கள் வெளியாகி ஏற்ற மளிக்கும் 
முதன்மையாய்த் தோன்றும் முனைந்து .

காலத்திற் கேற்ற களமாய் இணையமே 
ஞாலத்தில் நல்லறிவை நாட்டிடும் - நூலகமாய்ப் 
புத்தியைத் தீட்டிப் புதுமைகள் செய்விக்கும் 
சத்தாம் இணையத் தமிழ் . 

அழியா நிலையை அடைந்தேப் பொலிவாய்த் 
தழைக்கும் இணையத் தமிழே ! - மொழியிற்
சிறந்தே பவனிவரும் சீராய் உலகில் 
இறவாப் புகழினை ஏற்று .

கறையான் அரிக்காது; கள்வன் திருடான் 
நிறைவாய் வளரும் நிதமும்  - முறையாய்  
அணையாகக் காக்கும்; அறிவியல் பேசும்  
இணையத் தமிழே இனி .


            (ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி -2015 ல் மூன்றாம் இடம் பெற்ற கவிதை இது )

No comments:

Post a Comment