Saturday, June 20, 2015

தனிமையுடன் நாளைத் தள்ளிடுவேன் அன்பே !!



பெண்ணுன்னைப் பார்த்தேன் 
****பிரமித்து நின்றேன் ! 
கண்பார்த்துப் பூத்தேன் 
****காதலிலே வீழ்ந்தேன் ! 
எண்ணற்றப் பாக்கள் 
****ஏக்கமுடன் யாத்தேன் ! 
வண்டாக உன்னை 
****வட்டமிட்டு வந்தேன் ! 

தென்றலெனத் தவழ்ந்தாய் 
****தெவிட்டாமல் இனித்தாய் ! 
பொன்னென்று நினைத்தேன் 
****புன்னகையால் கொன்றாய் ! 
மின்னலென ஒளிர்ந்தாய் 
****மின்வெட்டாய் மறைந்தாய் ! 
என்னென்று சொல்வேன் 
****ஏமாற்றம் தந்தாய் ! 

கனிந்திட்ட நெஞ்சம் 
****கசந்ததுவும் ஏனோ ? 
அனிச்சமலர் போலே 
****அகம்வாட லாமோ ? 
இனியென்றன் வாழ்வில் 
****இடம்பெண்ணுக் கில்லை ! 
தனிமையுடன் நாளை 
****தள்ளிடுவேன் அன்பே ...!!!

No comments:

Post a Comment