Friday, October 11, 2019

என்ன தவம் செய்தோம் ...!!!


என்னதவம் செய்தோம்நாம் என்னதவம் செய்தோம்
எழில்கொஞ்சும் திருநாட்டில் இப்பிறப்(பு) எடுத்தோம் !
பொன்னான பல்வளங்கள் நிறைந்தெங்கும் மிளிரப்
பூமித்தா யின்கொடையாய் இயற்கைவரம் பெற்றோம் !
அன்பொன்றே சிவமென்ற சித்தர்வாக்(கு) உணர்ந்தோம்
அன்னைதந்தை முதற்கடவுள் என்றுபணியக் கற்றோம் !
பன்மொழிகள் இப்புவியில் பவனிவந்த போதும்
பைந்தமிழே முதன்மையென்று மார்தட்டி நின்றோம் !!
பழங்காலக் கோயில்கள் கலைநயத்தைக் காட்டப்
பண்பாட்டில் சிறந்திருந்த பெருமையைமதித்தோம் !
அழிவில்லா இலக்கியங்கள் தமிழ்மொழியில் தோன்றி
அறநெறியை எடுத்தியம்ப நல்வழியறிந்தோம் !
வழுவில்லா இறையுணர்வால் பக்திநெறி யோங்க
வளமையான பனுவல்கள் வரமாகப் பெற்றோம் !
எழுச்சியுறச் செய்தபல கவிகளின் படைப்பை
எல்லையில்லா மகிழ்வுடனே இதயத்தில் பதித்தோம் !!
எத்தனையோ இருந்தாலும் நிறைவென்னுள் இல்லை
இன்றமிழில் எழுதுவதே இன்பமென்று ணர்ந்தேன்!
தித்திக்கச் சொல்லடுக்கிக் கவிவனைந்த போதும்
சிறிதேனும் அதிலுள்ளம் அமைதிகொள்ள வில்லை !
சத்தான மரபினிலே நாட்டமிகக் கொண்டு
தணியாத தாகத்தில் முதலடியெடுத்தேன் !
முத்தாக மணியாகச் சுடர்விட்ட குழுவை
முகநூலில் இனங்கண்டு மகிழ்விலுளம் பூத்தேன் !
மரபுகற்றுக் கொடுக்கும்பைந் தமிழ்ச்சோலை வாசம்
மனத்தையள்ள பாவலரின் சோலையிலி ணைந்தேன் !
வரமென்றே தான்கருதிப் பயிற்சியில்பங் கேற்று
மாவரத ராசனிடம் பாட்டியற்றக் கற்றேன் !
அரும்பாக்கள் சோலையிலே பூத்துமணம் வீச
அழகழகாய்ப் பலவகையில் மரபில்சமைத்தேன் !
தருவாகப் பயன்கருதாத் தமிழ்த்தொண்டு செய்யும்
தமிழ்மகனைக் கண்டதுமென் தவப்பயனால் தானோ ??
என்போன்றே பலருக்கும் தன்னார்வத் தோடே
எளிமையாகக் கற்பிக்கும் பாவலரின் சேவை
முன்பைப்போல் எஞ்ஞான்றும் அன்புள்ளத் தோடு
முழுவதுமாய் வற்றாமல் முகநூலில் தேவை !
கன்றுகளின் பசியறிந்து பால்புகட்டும் தாயாய்க்
கனித்தமிழை நமக்கூட்டும் நல்லாசான் கிட்ட
என்னதவம் செய்தோம்நாம் என்னதவம் செய்தோம்
இத்தருணம் நன்றிசொல்வோம் கையிரண்டைக் குவித்தே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment