Friday, October 11, 2019

பாடு பாடு பாடு பாடு

பாடு பாடு பாடு பாடு
பணிவுடன் பாடு !
பாவம் தீரக் கண்ணீர் மல்கப்
பரமனைப் பாடு !
தேடு தேடு தேடு தேடு
சித்தனைத் தேடு !
சிந்தை குளிரச் செய்யு மினிய
தேவாரம் பாடு !
நாடு நாடு நாடு நாடு
நம்பிக்கை யோடு !
நல்ல வண்ணம் வாழ வைப்பான்
நற்றுணை யோடு !
கூடு கூடு கூடு கூடு
கோயிலில் கூடு !
கொஞ்சு மொழியில் நெஞ்ச முருகிக்
கூத்தனைப் பாடு !
ஆடு ஆடு ஆடு ஆடு
அன்புட னாடு !
ஆடல் வல்லான் ஆடி வருவான்
அம்பிகை யோடு !
காடு போகு முன்னர் ஈசன்
கழலடி பற்று !
காம குரோத லோப மென்ற
கயமைகள் விட்டு !!
வீடு பேற்றை யளிக்க வல்ல
வேதங்கள் ஓது !
வெண்ணீ றணிந்த இறைவன் பார்க்க
விலகிடும் தீது !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment