Saturday, January 26, 2019

மணிவாசகர் அருளிய திருவாசகம் ...!!!

ஆதிரை நாளில் திருநடம் புரிந்த
***அம்பல வாணனின் அருளால் 
பாதியாம் மாதைக் கூடிய பரமன்
***பதமல ரன்புடன் பற்றி
வாதவூர் வண்டு மறைகளி னின்றும்
***வழங்கிய வாசகத் தேனை
மாதவத் தோராய் மாந்திடும் அன்பர்
***வாழ்வினில் திருவருள் கிட்டும் !!
பிறைநில வோடு கங்கையைத் தலையில்
***பிரியமாய்ச் சூடிய பரமன்
உறைந்திடும் தலமாம் தில்லையம் பதியில்
***உளமதை யுருக்கிடும் வண்ணம்
சிறப்புடன் நெஞ்சத் துள்ளிருந் தழகாய்
***திருமணி வாசகர் பாட
இறையவன் தானே அந்தணன் வடிவில்
***எழுதிய பாடல்கள் இஃதே !!
அமிழ்தினு மினிய அழகிய நடையில்
***அகமதை நிறைத்திடும் சுவையில்
கமழ்ந்திடும் பாக்கள் படித்திட உள்ளக்
***கவலைகள் யாவையும் தீரும் !
சுமைமிகு வாழ்வில் சுகப்பட வைக்கும்
***துயர்களைப் பொசுக்கிடும் நெருப்பாய் !
நமனையும் வெல்ல திருவாச கத்தேன்
***நல்வழி காட்டிடும் இனிதே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment