Saturday, January 26, 2019

திருமண வாழ்த்து ....!!!

மணமக்கள்
****************
T. அருண் 
P. திவ்யா
நாள்
******
18:01:2019
மங்களமாய்த் தைத்திங்கள் நான்காம்நாள் காலை
***வாசலிலே தோரணங்கள் வண்ணங்கள் சேர்க்கப்
பொங்கிவரும் இன்பத்தில் பூங்காற்றும் சேரப்
***புன்னகைத்து மலர்களெல்லாம் புதுக்கோலம் போட
வங்கத்தின் அலையோசை செவியோரம் இனிக்க
***வசந்தங்கள் வாழ்த்திசைக்க வரிசையிலே நிற்கத்
தங்கங்கள் ஈன்றெடுத்த தங்கமகன் அருணைத்
***தலைவனாகக் கொள்வதற்குக் காத்திருக்கும் நங்கை !!
பார்த்திபனார் அமுதாவின் செல்வமகள் திவ்யா
***பாங்குடனே மணப்பந்தல் காணுகின்ற வேளை
ஊர்த்திரண்டு வந்திருந்து திருப்பூட்டு கண்டே
***உள்ளத்தில் அன்பொழுக அட்சதையைத் தூவ
சீர்மிக்க சொந்தபந்தம் நல்லாசி வழங்க
***செந்தேனாய் மாறாத சுவையோடு வாழ்வில்
பார்போற்ற வாழ்கவென்று நெஞ்சார வாழ்த்திப்
***பாடலொன்று நான்வனைந்தேன் பாசத்தி னாலே !!
குருவருளும் திருவருளும் வழிநடத்திக் காக்கக்
***குலம்விளங்க இல்லறத்தில் இன்பவொளி மின்ன
இருமனங்கள் ஒன்றாகி இணைகின்ற வாழ்வில்
***ஈடில்லா நன்மக்கட் பேறுபெற்றுப் புவியில்
வருகின்ற நாளெல்லாம் வள்ளுவத்தைப் போற்றி
***வாழையடி வாழையென வளத்தோடு வாழி !
அருந்தமிழ்போல் என்றென்றும் இளமையொடு வாழ்வை
***அழகாக்கி நலத்தோடு நூறாண்டு வாழி !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment