Saturday, January 26, 2019

பன்னிருசீர்ச் சந்த விருத்தம் ...!!!


நினைவெலாம் பசுமையாய்ப் பூம்பொழில் வாசமாய் நிறைந்துனை நேசிக்கிறேன் ! 
நித்தமும் நின்மலர்த் தாளினைப் போற்றியே கவிதைகள் வாசிக்கிறேன் ! 

பனையளவு பாசமும் வானளவு காதலும் கொண்டுனைப் பூசிக்கிறேன் ! 
பண்போடு நின்னகம் சேரவே நல்வரம் வேண்டிநான் யாசிக்கிறேன் ! 

உனையன்றி உள்ளத்தி லன்புசெய யாருமிலை பரிவாக வழிகாட்டவா ! 
உயிராக இதயத்தி னொலியாக விரலோடு யாழாக இசைமீட்டவா ! 

கனிவான மொழியினால் கண்ணனே கார்மேக வண்ணனே பிதற்றுகிறேன் ! 
கற்கண்டு சொற்கேட்டு நெஞ்சினில் களிப்பொடு மாயனே எனையாளவா !! 
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment