Saturday, January 26, 2019

தைமகளும் பிறப்பாள் ...!!!



காற்றுவந்து தாலாட்டக்
கதிர்வளைந்து ஆடும் - வாய்க்
காலில் கெண்டை ஓடும் - துள்ளிக்
கயல் மீன்களும் கூடும் - அந்தக்
கண்கொள்ளாக் காட்சிகண்ட
கன்னிமனம் பாடும் !!
சேற்றுக்குள்ளே இறங்கிநின்று 
சேலைசொருகிக் கொண்டாள் - அவள் 
சீராய் நாற்று நட்டாள் - மாமன் 
தேடிவரக் கண்டாள் - அவன் 
சீட்டியொலி கேட்டதுமே 
செக்கச் சிவந்து விட்டாள் !!
ஊர்ப்பார்த்தால் என்னவாகும் 
ஊமைச்சாடை புரிந்தாள் - அவள் 
உறவை எண்ணிப் பயந்தாள் - தன்
உயிருருக வியர்த்தாள் - அவனை 
உலகறியத் தாலிகட்ட
உளமலர அழைத்தாள் !!
மார்கழிக்குப் பின்னாலே 
தைமகளும் பிறப்பாள் - கை 
வளைகுலுங்க வருவாள் - நல்
வரம்மகிழ்ந்து தருவாள் - அவள் 
வாழவைக்க வழிகாட்டி 
வாழ்த்துமழை பொழிவாள் !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment