காற்றுவந்து தாலாட்டக்
கதிர்வளைந்து ஆடும் - வாய்க்
காலில் கெண்டை ஓடும் - துள்ளிக்
கயல் மீன்களும் கூடும் - அந்தக்
கண்கொள்ளாக் காட்சிகண்ட
கன்னிமனம் பாடும் !!
கதிர்வளைந்து ஆடும் - வாய்க்
காலில் கெண்டை ஓடும் - துள்ளிக்
கயல் மீன்களும் கூடும் - அந்தக்
கண்கொள்ளாக் காட்சிகண்ட
கன்னிமனம் பாடும் !!
சேற்றுக்குள்ளே இறங்கிநின்று
சேலைசொருகிக் கொண்டாள் - அவள்
சீராய் நாற்று நட்டாள் - மாமன்
தேடிவரக் கண்டாள் - அவன்
சீட்டியொலி கேட்டதுமே
செக்கச் சிவந்து விட்டாள் !!
சேலைசொருகிக் கொண்டாள் - அவள்
சீராய் நாற்று நட்டாள் - மாமன்
தேடிவரக் கண்டாள் - அவன்
சீட்டியொலி கேட்டதுமே
செக்கச் சிவந்து விட்டாள் !!
ஊர்ப்பார்த்தால் என்னவாகும்
ஊமைச்சாடை புரிந்தாள் - அவள்
உறவை எண்ணிப் பயந்தாள் - தன்
உயிருருக வியர்த்தாள் - அவனை
உலகறியத் தாலிகட்ட
உளமலர அழைத்தாள் !!
ஊமைச்சாடை புரிந்தாள் - அவள்
உறவை எண்ணிப் பயந்தாள் - தன்
உயிருருக வியர்த்தாள் - அவனை
உலகறியத் தாலிகட்ட
உளமலர அழைத்தாள் !!
மார்கழிக்குப் பின்னாலே
தைமகளும் பிறப்பாள் - கை
வளைகுலுங்க வருவாள் - நல்
வரம்மகிழ்ந்து தருவாள் - அவள்
வாழவைக்க வழிகாட்டி
வாழ்த்துமழை பொழிவாள் !!
தைமகளும் பிறப்பாள் - கை
வளைகுலுங்க வருவாள் - நல்
வரம்மகிழ்ந்து தருவாள் - அவள்
வாழவைக்க வழிகாட்டி
வாழ்த்துமழை பொழிவாள் !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment