அம்பு விடுத்தனையோ ஆழ்மனத்தில் தைக்கிறதே
கம்பன் மகனோ கவிதையிலே? - வம்பை
விலைகொடுத்து வாங்காதே; வீரனே! காதல்
வலைவீசு முள்ளம் வனப்பு .
இரவும் பகலும் இனியென்ன வேலை
சுரமேழில் பாடு சுகமாய் ! - வரமாகப்
பெற்றேன் உனைநான் பிரியமுள்ள தோழனே
சற்றே எனைப்பார்,கண் சாய்த்து .
உயர்வான நம்காதல் ஊர்பேச லாமோ
துயர்வந்து சேராதோ சொல்வாய்! - கயலாடும்
கண்களில் சிந்திடும் கண்ணீர் துடைத்திட
கண்ணனே வாராய் கனிந்து .
புகல்கின்ற வார்த்தைகள் பொன்மொழி யாக
பகலிரவும் உன்நினைவே பாரில் ! - நிகரில்லாப்
பேரழகா! பூத்திடும் பெண்ணென் உளத்தினைச்
சாரலாய்ப் பெய்து தணி..
நிறைந்தென் இதயத்தில் நித்த மிருப்பாய்
சிறைவைத்தே னுன்னைத் திருடி! - குறையின்றிக்
காப்பாய் உயிராய்க் கருதி இதமளிக்கப்
பூப்பேன் இதழ்சிவந்தாற் போல் ..
தொடர்ந்து வருவேன் துயரந் துடைக்கப்
படர்ந்து வருவேன் பனியாய்ச்! .- சுடரனைய
தேகத்தைத் தீண்டுவேன் தென்றலாய், முப்போதும்
சோகமே யில்லாச் சுகம் .
சுடரா யொளிரும் சுகமாய்ப் பரவும்
மடலாய் விரியும் மனிதம் - விடலைப்
பருவ மறிந்தும் பருகத் துடித்தும்
உருகும் மனமே உரம் .
புகழால் கருவமின்றிப் பொன்னா யொளிர்ந்தாய்
மகத்தில் பிறந்தயென் மன்னா ! - அகத்தினில்
உன்னை நினைத்தே உலகை மறந்தேனே
என்னதவம் செய்தேனோ யான் ?
குதித்துவிழும் ஐந்தருவி குற்றாலந் தன்னில்
நதியாய்ப் பெருகியோட நானும் - மதிமயங்கி
விட்டேன்; எழுதினேன் வெண்பா, உனக்கிது
சொட்டும் மழைபோல் சுகம் .
இறைவன் அருளாலே இல்வாழ்வில் சேர்ந்தே
குறைவிலா இன்பத்தைக் கொள்வோம் !- நிறைவுடன்
காதல் வனத்தில் களிப்புடன் ஆடியே
கீதம் இசைப்போம் கிளர்ந்து .
No comments:
Post a Comment