Monday, July 17, 2017

பொங்கிடு தமிழா ....!!!

நாட்டினில் நடக்கும் வன்முறை கண்டால் 
        நரம்பொடு நாடியும் துடிக்கும் !
சூட்டுடன் எதிர்த்தால் ஆணவ அரசோ 
     தொல்லைகள் ஆயிரம் கொடுக்கும் !
தீட்டிய திட்டம் சரியிலை  யெனினும் 
     செயல்பட வைத்தது நெருக்கும் !
கூட்டிய வரியால் மக்களின் நெஞ்சைக் 
      கூரிய ஈட்டியாய்ப் பிளக்கும் !

விற்பனை யாகும் கலப்படப் பொருளால் 
     விளைவுகள் பயங்கர மாகும் !
பற்றுடன் தமிழைப் பேசிட மறப்போர் 
      பாசமும் போலியாய்த் தோன்றும் !
நற்றமி ழறிந்தும் அறிந்திடாற் போல 
       நாவினில் ஆங்கிலம் உருளும் !
பெற்றவர் தம்மைக் காப்பகம் அனுப்பும் 
      பிள்ளையும் மிருகமாய்த் தெரியும் !

தஞ்சையின் கதிரா மங்கலம் நிலையால் 
      தவித்திடும் மக்களின் நெஞ்சம் !
வஞ்சியர்க் கிங்கே இழைத்திடும் கொடுமை 
     வதைத்திடும் உளத்தினை நித்தம் !
நஞ்சென மாறும் ஆலைகள் கழிவால்
      நதிகளும் பொலிவினை இழக்கும் !
பஞ்சமும் தோன்ற பட்டினிச் சாவால்
     பகைமையும் போட்டியும் பெருகும் !

வறுமையின் பிடியில் உழவனின் வாழ்வும் 
      மண்மிசை நரகென உழலும் !
உறுதியாய் நின்று துணிவுடன் எதிர்த்தும் 
      உண்மைகள் ஊமையாய் உறங்கும் !
இறுகிடும் இதயம் சாதியத் தீயால் 
      இறுதியில் தன்னுயிர் இழக்கும் !
சிறுமைகள் கண்டு பொங்கிடு தமிழா 
      சீறிடும் சிங்கமாய்ச் சிலிர்த்தே ! 

சியாமளா ராஜசேகர் 


No comments:

Post a Comment