Wednesday, July 19, 2017

மெல்லினமாய் ஒரு மெல்லிசைப் பாடல்



சங்கு கழுத்தினில் தங்க மணிச்சரம்
அங்க மழகாக்கும் ! - அதில்
பொங்கும் சிரிப்பது மங்கைக் கனியிதழ்
தங்கும் வரமாகும் !

கஞ்ச மலரென வஞ்சி முகமதில்
மஞ்சள் களைகூட்டும் ! - அவள்
கொஞ்சு மிளமையும் நெஞ்சம் கவர்ந்திட
கெஞ்சி உறவாடும் !
செண்டு மலர்மணம் கொண்ட வனிதையின்
கெண்டை விழிபேசும்! - அவள்
வண்டு கருவிழி கண்ட அவன்மனம்
உண்டு பசியாறும்!
சிந்து மழையினில் சிந்தை குளிர்ந்திட
சொந்தம் வலுவாகும் ! - அவள்
சந்த மிசைத்திட வந்த கவியதும்
முந்தி விளையாடும் !
செம்மை யழகுடன் கும்மி யடிப்பவள்
கம்மல் அசைந்தாடும் ! - கவிக்
கம்பன் உறவென அம்மன் வடிவென
நம்பிக் கதைபேசும் !
மின்ன லிடையினைப் பின்னல் தழுவிடச்
சின்ன யிதழ்கூசும் ! - அவள்
கன்னல் மொழியினில் தன்னை யிழந்தவன்
இன்பம் பலவாகும் !
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment