Wednesday, July 26, 2017

அந்தியிலே வானம் ....!!!

பொன்னொளி சிந்தும் மாலை 
>>>புத்துணர் வளிக்கும் வேளை
சென்றிடத் துடிக்கும் வெய்யோன் 
>>>செந்நிற மாகத் தோன்றும் 
இன்பமாய் விடையும் பெற்று  
>>>இரவினை அழைக்கச் செல்லும் 
ஒன்றுமே அறியாற் போல 
>>>ஒளிந்திடும் மேகத் துள்ளே !

அந்தியில் மஞ்சள் பூசி 
>>>அழகிய கதிரும் நோக்க 
இந்திர லோகம் கூட 
>>>எட்டியே அதனைப் பார்க்கும் 
மந்திர மிட்டாற் போல 
>>>மாயமாய் மறைந்து போகும் 
சந்திரன் வருவ தற்குச்
>>>சம்மதம் தானும் சொல்லும் !

சிவந்ததேன் வெள்ளை மேனி 
>>>சிரித்ததால் மட்டும் தானோ ?
உவகையாய்க் கரங்கள் நீட்டி 
>>>உறவினைப் பிரியத் தானோ ?
தவமென நினைத்தே அஃதும்
>>>தரணியில் காலை பூக்கும் !
கவலைக ளின்றி வானில் 
>>>கருமுகில் கூட்டம் ஓடும் !

அந்தியில் தென்றல் காற்றும் 
>>>அற்புத கானம் பாடும் !
வெந்தழல் சூடு மாற 
>>>மேனியில் வியர்வை காயும் !
செந்நிற வானம் பார்த்துச் 
>>>சிந்துவில் பாடத் தோன்றும் !
நிந்தனை செய்வோர் கூட 
>>>நிம்மதி  கொள்வர் தாமும் !

கொடியிலே மல்லி பூத்துக்
>>>குலுங்கிட மனமு மாடும் !
குடித்திட மலரில் தேனைக் 
>>>குனிந்திடும் வண்டு பாடும் !
துடிப்புடன் அடையும் கூட்டை 
>>>தொலைவிடம் சென்ற புள்ளும் !
பிடித்திடா மாலை  யுண்டோ 
>>>பிரியமும் கூட்டும் நன்றே !

சியாமளா ராஜசேகர் 


No comments:

Post a Comment