Tuesday, July 18, 2017

கிழக்கால கதிரவனும் ......!!!


கிழக்கால கதிரவனும் 
     கெளம்பிமேல வருகுது !
அழகான வெண்ணிலவ 
     அனுப்பிவிட்டுச் சிரிக்குது !
கழனியிலே காத்தடிக்கக்
      கதிரெல்லாம் அசையுது !
வழக்கம்போல பசுங்கொடியில் 
     மல்லிமொட்டு விரியுது  !

கூரமேல ஏறிநின்னு
     கொண்டச்சேவல் கூவுது !
ஈரக்காத்து எதமாக 
    இதயத்த நனைக்குது !
வீரபாண்டி கோயிலிலே 
     வெள்ளிமணி ஒலிக்குது !
சாரப்பாம்பு பொந்துக்குள்ள 
     சலசலத்து ஓடுது !

தூங்குமூஞ்சி மரமெல்லாம் 
     சுருண்டயில திறக்குது !
பூங்குயிலும் ராகத்தோடு 
     பூபாளம் பாடுது ! 
மூங்கிலிலைப்  பனித்துளியும் 
     முத்தாக மின்னுது !
தேங்கிநிக்கும் குளத்தினிலே 
     செங்கமலம் சிரிக்குது !

மாமரத்துக் கிளியழகா 
     மாங்காயக் கொறிக்குது !
சாமரமும் வீசினாப்போல் 
    சாஞ்சகிளை ஆடுது !
பூமணக்கும் தென்றலிலே 
     புதுராகம் கேக்குது !
தாமரையும் இதழ்விரிக்கத் 
     தவிப்போடு பாக்குது ! 

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment