Tuesday, July 25, 2017

என்னருகி நீயிருக்க ....!!!


என்னருகில்  நீயிருந்தால் 
>>>இதயத்தில் தேன்பாயும் !
பொன்னந்தி மாலையிலே 
>>>புதுக்கவிதை தினம்பாடும் !
அன்னநடை நீபயில 
>>>அழகுரதம் போலிருக்கும் !
கன்னிமயில் நீபார்க்க 
>>>காதலிலே மெய்யுருகும் !!

வண்ணங்கள் ஏழுகொண்ட 
>>>வானவில்லின் ஜாலம்நீ !
எண்ணத்தில் எந்நாளும் 
>>>இனிக்கின்ற கீதம்நீ !
வெண்ணிலவின் கரங்கோர்த்து 
>>>விளையாடும் தாரகைநீ ! 
பெண்ணாகப் பிறப்பெடுத்த 
>>>பிரியமுள்ள தேவதைநீ !!

கொஞ்சிவரும் உன்சிரிப்பில் 
>>>குற்றுயிராய்ப் போனேனே !
வஞ்சிமலர் உனைச்சுற்றும்
>>>வண்டாக ஆனேனே !
மஞ்சத்திலே உனையணைக்க 
>>>மையலினால் துடித்தேனே !
நெஞ்சத்தில் சுமந்ததனால் 
>>>நிம்மதியும் கொண்டேனே !!

பொட்டுவைத்த வட்டமுகம் 
>>>புன்னகைக்க வாராயோ ?
மொட்டவிழ்ந்த காதலினால் 
>>>மோகனமாய்ப் பாடாயோ ?
தொட்டுவிட்டு நமைநனைக்கும் 
>>>தேன்மழையில் ஆடாயோ ?
பட்டுமெத்தைக் காத்திருக்க 
>>>பைங்கிளியே கூடாயோ ?

அல்லியிதழ் சிவந்ததைப்போல் 
>>>அழகாகச் சிரித்திடுவாய் !
முல்லைமலர்  நறுமணமாய்  
>>>மூச்சினிலே கலந்திடுவாய் !
நில்லாத மாருதமாய் 
>>>நெஞ்சத்தில் தவழ்ந்திடுவாய் !
சொல்லாத கதையெல்லாம் 
>>>சுகமாகச் சொல்வாயே !!! 

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment