என்னருகில் நீயிருந்தால்
>>>இதயத்தில் தேன்பாயும் !
பொன்னந்தி மாலையிலே
>>>புதுக்கவிதை தினம்பாடும் !
அன்னநடை நீபயில
>>>அழகுரதம் போலிருக்கும் !
கன்னிமயில் நீபார்க்க
>>>காதலிலே மெய்யுருகும் !!
வண்ணங்கள் ஏழுகொண்ட
>>>வானவில்லின் ஜாலம்நீ !
எண்ணத்தில் எந்நாளும்
>>>இனிக்கின்ற கீதம்நீ !
வெண்ணிலவின் கரங்கோர்த்து
>>>விளையாடும் தாரகைநீ !
பெண்ணாகப் பிறப்பெடுத்த
>>>பிரியமுள்ள தேவதைநீ !!
கொஞ்சிவரும் உன்சிரிப்பில்
>>>குற்றுயிராய்ப் போனேனே !
வஞ்சிமலர் உனைச்சுற்றும்
>>>வண்டாக ஆனேனே !
மஞ்சத்திலே உனையணைக்க
>>>மையலினால் துடித்தேனே !
நெஞ்சத்தில் சுமந்ததனால்
>>>நிம்மதியும் கொண்டேனே !!
பொட்டுவைத்த வட்டமுகம்
>>>புன்னகைக்க வாராயோ ?
மொட்டவிழ்ந்த காதலினால்
>>>மோகனமாய்ப் பாடாயோ ?
தொட்டுவிட்டு நமைநனைக்கும்
>>>தேன்மழையில் ஆடாயோ ?
பட்டுமெத்தைக் காத்திருக்க
>>>பைங்கிளியே கூடாயோ ?
அல்லியிதழ் சிவந்ததைப்போல்
>>>அழகாகச் சிரித்திடுவாய் !
முல்லைமலர் நறுமணமாய்
>>>மூச்சினிலே கலந்திடுவாய் !
நில்லாத மாருதமாய்
>>>நெஞ்சத்தில் தவழ்ந்திடுவாய் !
சொல்லாத கதையெல்லாம்
>>>சுகமாகச் சொல்வாயே !!!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment