Tuesday, July 25, 2017

விவசாயம் காப்போம் ...!!!

பாடுபட்டுப் பலகோடி சேர்த்தாலும் பசித்தால்
பணத்தையுண்டு பசிவெல்ல முடிந்திடுமோ சொல்வீர்!
காடுகரை யாவுமிங்கே கட்டிடங்கள் ஆனால்
கால்வயிற்றுக் கஞ்சிக்கும் தவிக்கத்தான் வேண்டும்!
கேடுகளை வேரறுத்து வயல்வெளியைக் காத்தால்
கிள்ளியேனும் உணவுண்ண வாய்ப்புண்டு காண்பீர்!
ஈடுசொல்ல முடியாத தொழிலெதுதா னென்றால்
ஏருழவன் செய்கின்ற விவசாயம் ஒன்றே!
விளைநிலங்கள் இக்கணத்தில் விலைநிலமாய்ப் போனால்
விளைவுகளும் விபரீதம் ஆகிடுமே உணர்வீர்!
களையெடுத்துப் பயிர்காக்கும் உழவர்தம் நிலையும்
கழனியிலே கதிர்போலக் காணாமல் போகும்!
சளைக்காமல் போராடி உரிமைகளை மீட்டுத்
தரணியிலே தழைத்தோங்க வழிவகைமை செய்வோம்!
இளைக்காமல் விவசாயி வாழ்வினையும் பேணி
இயற்கையுடன் இயைந்தேநாம் விவசாயம் காப்போம்!

No comments:

Post a Comment