Sunday, November 15, 2015

நின் புகழ் வாழுமே நீடு !

தன்னல மில்லாத் தகைமையிற் சீலரே
தன்னடக் கத்தின் தலைமகனே ! - அன்புடன்
தன்னம்பிக் கையூட்டிச் சாதிக்கச் செய்தவரே
நின்புகழ் வாழுமே நீடு !
வல்லரசாய்த் தாய்நாட்டை மாற்ற வழிகாட்டி
நல்லறி வூட்டிய நாயக !- செல்லுமிட
மெல்லாம்நீ மாணவரு ளேற்றிய ஞானவொளி
வெல்லு முலகில் மிளிர்ந்து .
கண்ணியத் தோடு கடமைக ளாற்றியே
மண்ணில்நற் பேரெடுத்த வல்லவரே !- உண்மையில்
எண்ணிவியக் கின்றோம் எளிமையின் உச்சமே
விண்சென்றா யெம்மையழ விட்டு .
இன்முக வித்தகர் ஏவுகணை நாயகர்
அன்பில் கலாமும் அதிசயமே ! - அன்னார்
கனவைமெய்ப் பிக்க கனவுகள் கண்டே
நனவாக்கு வோமின்றே நாம் .
வித்தை விதைத்தீர் விருட்ச மெனவளர்வோம்
முத்தாய் ஒளிர்வோம் முதன்மையாய் - நித்தமும்
சத்திய மாய்முயன்று சாதிப்போம்! எண்ணத்தில்
உத்தம!நீ யெம்மை உயர்த்து .
தூய்மையின் சின்னமாய்ச் சோர்வின்றித் தன்பணியில்
வாய்மையே கொள்கையாய் வாழ்ந்தவ ! - மாய்ந்தவுனைத்
தாய்மடி போலவே தன்னுள்ளே தாங்கிட
பேய்க்கரும்புப் பெற்றதோ பேறு ?

       ( துபாய் தமிழர் சங்கமம் நடத்திய உலகளாவிய கவிதைப் போட்டி -2015 - ல்
         முதல் சுற்றில் தேர்வானக் கவிதை )

No comments:

Post a Comment