Tuesday, September 29, 2015

மரணம் தழுவிட வந்திடும் போது .....!!!

மரணம் தழுவிட வந்திடும் போது 
சரணம் நவின்றே சகலமும் ஒடுங்க 
பரம னருளால் பயமும் விலகி 
சிரத்தைத் தாழ்த்திச் சிரித்தே ஏற்போம் ! 

உறவின் அணைப்பை உதறியே விட்டு 
மறலி யழைப்பை மறுதலிக் காமல் 
அறத்தின் பயனால் அவனுடன் சென்றே 
இறப்பை நாமும் இனிதாய் ஏற்போம் ! 

சவமாய்ச் சிதையில் சரிந்திடும் நேரம் 
சிவத்தின் நினைவே சிந்தையில் நிறைய 
தவத்தின் உயர்வால் சஞ்சல மகன்று 
பவமும் நீங்க பக்தியும் செய்க ! 

உதித்தல் உதிர்தல் உயிர்களின் நியதி 
கொதித்துத் துடித்துக் குமுறிட லாமோ ? 
விதியின் வழியே வினையும் முடியும் 
துதிப்பாய் நெஞ்சே ! துணைவரும் இறையே !

No comments:

Post a Comment