Friday, September 11, 2015

அமுதாய்க்கவி பிறக்கும் ....!!!



மலைமேனியில் முகில்தூங்கிடும் வனப்பில்மனம் குதிக்கும் ! 
அலையாடிடும் தரங்கந்தனில் அழகாய்நுரை மிதக்கும் ! 
இலைமேல்பனி உருண்டோடிட இயலாமலுந் தவிக்கும் ! 
கலைகொஞ்சிடும் எழிற்சிற்பமும் கனிவாய்விழி திறக்கும் ! 

நதிபாய்கையில் கரைநாணலும் நனிவீசிடக் குளிரும் ! 
மதிதாரகை புடைசூழ்ந்திட வலம்வந்தது களிக்கும் ! 
புதிதாய்வளி வருடிச்செல பொலிவாயுளம் சிரிக்கும் ! 
அதியற்புதம் விழிகாண்கையில் அமுதாய்க்கவி பிறக்கும் ! 


( இது அதிகரீணி வகையிலான கலி விருத்தம் ) 

புளிமாங்கனி + புளிமாங்கனி + புளிமாங்கனி + புளிமா

No comments:

Post a Comment