Tuesday, August 8, 2017

கொலுசொலி ....!!!

கொலுசொலி ....!!!
************************
மஞ்சள் முகத்தில் ஒளிதுலங்க 
கஞ்ச மலராய் இதழ்சிவக்க 
வஞ்சி யவளும் நடைபழகக் 
கொஞ்சி வருதே கொலுசினொலி !

பாத மெடுத்து வைக்கையிலே 
நாத மிசைத்துச் சலங்கையுடன் 
ஊதக் காற்றின் கிளுகிளுப்பில்
மோத லின்றிச் சிணுங்கிடுதே !

ஜல்ஜல் லென்றே துள்ளிவரும் 
சொல்சொல் லென்றே உளம்கெஞ்சும் 
செல்செல் லென்றே காலிழுக்கும் 
நில்நில் லென்றே மனம்துடிக்கும் !

வெள்ளிக் கொலுசு சத்தத்தில்
துள்ளா  மனமும் துள்ளிடுதே 
கள்ளி உன்றன் வரவுதனைக் 
கள்ள மின்றிக் காட்டிடுதே  !

காலைத் தழுவும் கால்கொலுசு 
சேலைக் குள்ளே ஒளிந்திருந்து 
வாலைக் குமரி உன்னழகை 
மாலைப் பொழுதில் கூட்டிடுதே  !

சந்தத் துடனே தாளமிட்டுச் 
சிந்தை கவரும் கொலுசொலியே 
தந்தி போல முன்வந்து 
சொந்தங் கொள்ளச் சொல்லிடுதே !!


சியாமளா ராஜசேகர் 



No comments:

Post a Comment