கொலுசொலி ....!!!
************************
மஞ்சள் முகத்தில் ஒளிதுலங்க
கஞ்ச மலராய் இதழ்சிவக்க
வஞ்சி யவளும் நடைபழகக்
கொஞ்சி வருதே கொலுசினொலி !
பாத மெடுத்து வைக்கையிலே
நாத மிசைத்துச் சலங்கையுடன்
ஊதக் காற்றின் கிளுகிளுப்பில்
மோத லின்றிச் சிணுங்கிடுதே !
ஜல்ஜல் லென்றே துள்ளிவரும்
சொல்சொல் லென்றே உளம்கெஞ்சும்
செல்செல் லென்றே காலிழுக்கும்
நில்நில் லென்றே மனம்துடிக்கும் !
வெள்ளிக் கொலுசு சத்தத்தில்
துள்ளா மனமும் துள்ளிடுதே
கள்ளி உன்றன் வரவுதனைக்
கள்ள மின்றிக் காட்டிடுதே !
காலைத் தழுவும் கால்கொலுசு
சேலைக் குள்ளே ஒளிந்திருந்து
வாலைக் குமரி உன்னழகை
மாலைப் பொழுதில் கூட்டிடுதே !
சந்தத் துடனே தாளமிட்டுச்
சிந்தை கவரும் கொலுசொலியே
தந்தி போல முன்வந்து
சொந்தங் கொள்ளச் சொல்லிடுதே !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment